Homeஆன்மீகம்வேடந்தவாடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி யாகம்

வேடந்தவாடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி யாகம்

திருவண்ணாமலை வேடந்தவாடியில் குருபெயர்ச்சி யாகம்


வேதங்கள் வழிபட்ட திருத்தலம் 

2000 வருடங்கள் பழமையானது

குரு பகவானுக்கு 9அடி உயரத்தில் சிலை

திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடியில் வட ஆலங்குடி என்றழைக்கப்படும் குரு பரிகார தலத்தில் நடைபெற்ற மகா குரு பெயர்ச்சி யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பெயர்¸ ராசிக்கு அர்ச்சனை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வட்டம் வேடந்தவாடி கிராமத்தில் வேதநாத ஈஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த கோயிலாகும். வேதநாத ஈஸ்வரரை ரீக்¸ யசூர்¸ சாம அதர்வண வேதங்களும் மகாவிஷ்ணுவாகிய கோவிந்தராஜ பெருமாளும் வழிபட்டனர் என்பது வரலாறு ஆகும்.

இங்கு குருதட்சணமூர்த்தி 9 அடி உயர சிலை அமைக்கப்பட்டு குரு யோகதட்சணாமூர்த்தி என்ற பெயரில் தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஈஸ்வரனை வேதங்கள் வழிப்பட்டதால் இது குருதோஷ பரிகாரதலமாக கருதப்படுகிறது. மேலும் ஆலங்குடிக்கு இணையானதாக விளங்குவதால் வட ஆலங்குடி என்று போற்றப்படுகிறது.

திருவண்ணாமலை வேடந்தவாடியில் குருபெயர்ச்சி யாகம்

இக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு 9.36 மணிக்கு குருபகவான் தனுசு இராசியில் இருந்து மகர இராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி இங்கு உலக நன்மைக்காக லட்சார்ச்சனையும்¸ சிறப்பு பரிகார மஹா யாகமும் அகஸ்தியரின் சீடர்¸ அகஸ்திய கிருபா திருக்கழுக்குன்றம் அன்புச்செழியன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து பரிகாரம் தங்கள் பெயர்¸ ராசிக்கு அர்ச்சனை செய்து கொண்டனர். மேலும் நெய்யால் தீபம் ஏற்றி குரு பகவானை வழிபட்டனர். இந்த குரு பெயர்ச்சியால் சுமாரான பலன்களை பெறுகின்ற மேஷம்¸ மிதுனம்¸ சிம்மம்¸ துலாம்¸ விருட்சிகம்¸ மகரம்¸ கும்பம் ராசியினர் பரிகாரம் செய்து கொண்டனர். நல்ல பலன்களை பெறுகின்ற ரிஷபம்¸ கடகம்¸ மீனம்¸ கன்னி¸ தனுசு ராசியினர் லட்சார்ச்சனை செய்து கொண்டனர். 

இதில் நல்லாசிரியர் விருது பெற்ற  தணிகை வையாபுரி¸ அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்திராணி¸ ஆறுமுக சுவாமி¸ மண்ணு¸ காளி பூசாரி¸ உதயகுமார்¸ பாண்டியன்¸ சங்கர்¸ அன்பழகன்¸ ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

திருவண்ணாமலை வேடந்தவாடியில் குருபெயர்ச்சி யாகம்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை கார்த்திக் சர்மா¸ ஆலய அர்ச்சகர் தீபஒளி. வெ.ஏழுமலை (எ) ஜோதி சுவாமிகள்¸ ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சரவணன்¸ எம்.சுந்தரமூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இது குறித்து அகஸ்திய கிருபா திருக்கழுக்குன்றம் அன்புச்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸ 

இங்குள்ள தட்சிணாமூர்த்தி வேதங்களால் பூஜிக்கப்பட்டவர். இதனால் அபரீதமான சக்தியை கொண்டவர். திருவண்ணாமலை அண்ணாமலையாரை பார்த்தவாறு அமர்ந்திருக்கும் இவரிடம் கண்கலங்கி¸ மனம் உருகி சரணாகதி அடைகிறவர்களுக்கு அப்போதே நன்மைகளை தரும் தன்மை வாய்ந்தவர். இவரை வணங்கி வேண்டி கொண்டால்  மனநலம் குன்றியவர்கள்¸ கை¸கால் பிரச்சனை உடையவர்கள்¸ கோமா நிலையில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். இங்கு நடைபெற்ற குரு பெயர்ச்சி யாகத்தால் உலகத்தில் மாற்றம் ஏற்படும்¸ கொரோனா தாக்கம் நீங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!