Homeசெய்திகள்கொரோனா காலத்திலும் கோடியை சுருட்டிய அதிகாரி

கொரோனா காலத்திலும் கோடியை சுருட்டிய அதிகாரி

கொரோனா காலத்திலும் கோடியை சுருட்டிய அதிகாரி
எஸ்.பி.அலுவலகத்தில் புகார்தாரர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் விதிமுறைகளை மீறி சமையலர் பணியிடங்களை நிரப்பிட கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டிருப்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

புகார் மனு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை தெருவைச் சேர்ந்த ஏ.ராஜமான்சிங் என்பவர் இன்று திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர்¸ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்¸ லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது¸

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் சமையலர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். இதற்கு ரூ.10 லட்சம் தர வேண்டும் என என்னிடம் கேட்டனர். இப்பணிக்கு இடைத்தரகர்கள் மூலம் ஒரு பணியிடத்திற்கு ரூ.10 லட்சம் வீதம் வசூல் செய்யப்பட்டும் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. 

விதிமீறல்

எந்த ஒரு அரசாணையும் பிறப்பிக்கப்படாமல் காலி பணியிடங்களில் உள்ள உள் ஒதுக்கீடுகள் எஸ்.சி மற்றும் எஸ்.டியில் ஆண்கள்¸ பெண்கள்¸ எஸ்.சி.ஏவில் ஆண்கள்¸ பெண்கள்¸ விதவைகள்¸ முன்னாள் இராணுவத்தினர் ஆகிய உள் ஒதுக்கீடுகளை செய்தித்தாள் மூலம் விளம்பரப்படுத்தி அறிவிக்கவில்லை. இதில்  விதிமீறல் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனி மாவட்ட பழங்குடியினர் அலுவலர் மற்றும் அலுவலகம் இருந்து வருகிறது. இதன் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு இந்த அலுவலகம் மூலம் தான் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஆனால் இந்த காலிபணியிடங்களை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலம் நிரப்பப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா காலத்திலும் கோடியை சுருட்டிய அதிகாரி
கதிர்சங்கர்

பலகோடி ரூபாய் 

கொரோனா பாதிப்பு காலத்தில் கடந்த 8 மாதங்களாக தமிழக அரசு மூலம் பள்ளிகள் மற்றும் விடுதிகள் அனைத்து முடப்பட்டு இருந்து வரும் நிலையில்¸ திறக்கப்படாத விடுதிகளுக்கு அவசர அவசரமாக மாவட்ட ஆதிதிராவிட அலுவலர் இடைத்தரகர்கள் மூலம் சமையலர் பணியிடங்களை நிரப்ப பலகோடி ரூபாய் வசூலித்துள்ளார்.  இரவு காவலர் பணியிடத்தை சமையலர் காலிப்பணிடமாக கணக்கு காண்பித்து மோசடி நடைபெற்றுள்ளது. 

கொரோனா பாதிப்பு காலத்தில் கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் மற்றும் விடுதிகள் அனைத்தும் முடப்பட்டிருந்த நிலையில் மாவட்ட ஆதிதிராவிடர் நில அலுவலர் தன்னுடைய பதவியை பயன்படுத்திக் கொண்டு மேலிடத்திற்கு கொடுக்க வேண்டும் என மாவட்டத்தில் இயங்கும் விடுதிகளின் பெயரில் உணவு கட்டணமாக 2020 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் சார் கருவூலத்தின் மூலம் பணத்தை எடுத்துள்ளார். 

அமைச்சர் பி.ஏ

இந்த ஊழல்கள்¸ பணம் வசூல் அனைத்தும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கதிர்சங்கர்¸ ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் ரவிக்குமார் செங்கம் மாணவர் விடுதி காப்பாளர் ஆறுமுகம்  மூலம் நடைபெற்று வருகிறது.

எனவே விதிமுறைகளும் மீறி பணியிடம் நிரப்ப வருகிற 2 மற்றும் 3ந் தேதிகளில் நேர்முக தேர்வை நடத்த உள்ளனர். எனவே இதை நிறுத்தி வைத்து புதிய பணியிட அறிவிப்பை வெளியிட்டு காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும். 

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ராஜமான்சிங் கூறுகையில் சமையலர் பணியில் அமர்த்த ரூ.10 லட்சம் தர வேண்டும் என என்னிடமே கேட்டனர். சமையலர் பணியிடம் நேர்மையாக நிரப்பப்பட வேண்டும் என்பதற்காகவும்¸ உணவு கட்டணத்தில் நடைபெற்ற ஊழல் குறித்தும்¸ சமையலர் பணியிடங்களில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்தும்¸ இப்பணியிடங்களை நிரப்பிட பணம் வசூலிக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த புகாரை கொடுத்துள்ளேன் என்றார்.  

ஆடியோ ஆதாரம்

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற நேர்காணலின் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.6 லட்சம் லஞ்சப்பணம் சிக்கியது. இந்நிலையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் ரவிக்குமார் உடந்தையாக இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆடியோ அடங்கிய குறுந்தகடும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தரப்பட்டுள்ளது. 

உணவு கட்டண முறைகேடு¸ இரவு காவலர் பணியிடத்தை சமையலர் காலி பணியிடமாக மாற்றியுள்ளது¸ 42 சமையலர் காலி பணியிடங்களை நிரப்ப ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.10 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணையை துவக்க உள்ளனர். 

பரபரப்பு 

கொரோனா காலத்தில் ஒட்டு மொத்த தமிழகமே முடங்கியிருந்த நிலையிலும்¸ பலர் வருமானம் இழந்து தவித்து வந்த நிலையிலும் அரசு அதிகாரி ஒருவர் கொரோனாவின் போது செயல்படாத விடுதிகளில் 1 கோடிக்கு மேல் உணவு கட்டணத்தை சுவாகா செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!