Homeஅரசியல்மினி கிளினிக் - அமமுக¸ பா.ஜ.க போராட்டம்

மினி கிளினிக் – அமமுக¸ பா.ஜ.க போராட்டம்

மினி கிளினிக்-அமமுக, பா.ஜ.க போராட்டத்தால் பரபரப்பு 

திருவண்ணாமலை மருத்துவாம்பாடியில் மினி கிளினிக் திறக்கப்படாததை கண்டித்து  கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும்¸ செய்யாறு தலைமை மருத்துவமனை உள்பட 10 அரசு மருத்துவமனைகளும்¸ 93 ஆரம்ப சுகாதார நிலையங்களும்¸ 6 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களும்¸ 410 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.

30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வீதம் செயல்பட்டு வருவதால் கிராமப்புறங்களில் உள்ளவர்களும் எளிதில் சிகிச்சை பெறும் வகையில்¸ தமிழகம் முழுவதும் 2000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 இடங்களில் அம்மா மினி கிளினிக் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. 

காலை 8 மணி முதல் 12 மணி வரையும்¸ மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும் இந்த மினி கிளினிக்கில் இ.சி.ஜி. பரிசோதனை¸ சர்க்கரை அளவு¸ உப்பு¸ காசநோய் கண்டறிதல்¸ இரத்த அழுத்தம் பார்த்தல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சளி¸ இருமல்¸ காய்ச்சல்¸ காயம் மற்றும் சிறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். முக்கியமாக வெறிநாய் கடிக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுவதால் கிராம மக்களிடையே இந்த மினி கிளினிக்கிறகு வரவேற்பு கிடைத்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 2வது கட்டமாக 40 ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக் திறக்கப்படவுள்ளது. அதில் இன்று திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆடையூர்¸ கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேடநத்தம்¸ இராஜந்தாங்கல்¸ தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணக்கந்தல்¸ செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கட்டமடுவு¸ சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மன்சூராபாத்¸ பெரணம்பாக்கம்¸ ஓதலவாடி ஆகிய 8 ஊர்களில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. 

இந்த விழாக்களில் தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி¸ மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி¸ சுகாதார பணிகள் துணை இயக்குநர் கே.எம்.அஜீதா¸ முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு¸ முன்னாள் மாநில கூட்டுறவு ஒன்றிய தலைவர் அமுதா அருணாசலம்¸ ஆவின் இயக்குநர் எஸ்.தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.குமாரசாமி¸ எம்.சி. அசோக்¸ ஆடையூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைவாணி முனுசாமிஉள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மருத்துவாம்பாடியில் இன்று மினி கிளினிக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அமைச்சரை வரவேற்று பேனர்களும்¸ அலங்கார வளைவுகளும் அந்த கிராமத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் மினி கிளினிக் செயல்படும் அரசு கட்டிடத்திற்கு வர்ணம் பூசப்பட்டு¸ டேபிள்¸ சேர்¸ நோயாளிகளுக்கான படுக்கை ஆகியவை போடப்பட்டிருந்தது. மருந்து¸ மாத்திரைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

மினி கிளினிக்-அமமுக, பா.ஜ.க போராட்டத்தால் பரபரப்பு

பகல் 2 மணிக்கு இந்த மினி கிளினிக் திறக்கப்படும் என சொல்லப்பட்டதால் பொது மக்கள் அங்கு திரண்டிருந்தனர். நேரம் ஆக¸ ஆக கிளினிக் திறப்பிற்கு எந்த அறிகுறியும் தெரியாததால் ஊராட்சி மன்றத் தலைவரும்¸ வழக்கறிஞருமான சிவக்குமார்(அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது விழா ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக்கை திறக்காமல் அமைச்சரும்¸ அதிகாரிகளும் புறக்கணித்து விட்டதாக கூறி அந்த கிராம மக்கள் அம்மா கிளினிக் கட்டிடத்திற்கு முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் சிவக்குமார்¸ பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஓபிசி அணி மாவட்ட தலைவர் எம்.டி. சுந்தர்ராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். 

தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை தாசில்தார் வெங்டேசன் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் மற்றும் பா.ஜ.க ஓபிசி அணி மாவட்ட தலைவர் எம்.டி. சுந்தர்ராஜ் ஆகியோருடன்  பேச்சு வார்த்தை நடத்தினர். மருத்துவாம்பாடியில் 1 வார காலத்திற்குள் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளிக்கப்பட்டதால் தர்ணா போராட்டத்தை கிராம மக்கள் விலக்கி கொண்டனர். 

கிராம மக்களின் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த வாரமும் மினி கிளினிக் திறக்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கிராம மக்கள் தெரிவித்தனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!