பா.ஜ.கவிடமிருந்து அதிமுகவை திமுக காப்பற்றும் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கலைஞர் அரங்கில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன்¸ மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன்¸ மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம்¸ ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் ந.சந்திரன்¸த.ரமணன்¸ பெ.கோவிந்தன்¸ ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது¸
அதிமுகவை காப்பாற்றுவோம்
மத்திய-மாநில அரசுகளால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வாக்காளர்களிடம் சொல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நாம் மற்றொரு செய்தியையும் அதிமுக தொண்டர்களுக்கும் சொல்லவேண்டிய நிலையில் உள்ளோம். ஏனென்றால் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அவர்கள் மூலம் அதிமுக கட்சியையே அவர்கள் கைப்பற்றிவிடுவார்கள். எனவே தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க வைப்பதன் மூலம் நாம் அதிமுகவையே காப்பாற்றுகிற நிலைமையில் உள்ளோம். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஊடுருவி நூற்றாண்டு காலம் கண்ட திராவிட திராவிட இயக்கத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறது.
தொல்பொருள் துறை
திருவண்ணாமலையும்¸ திருப்பரங்குன்றமும் ஆன்மீக பூமி என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தை வைத்தும்¸ திருப்பரங்குன்றம் முருகர் ஆலயத்தை வைத்தும் மத்தியில் ஆளுகிற பாஜக இங்கே வேட்பாளர்களை நிறுத்தி வைத்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில்கூட ஏதோ இவர்கள்தான் கடவுளை காப்பாற்றுபவர்களைப்போல பேசுகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் மத்தியில் பாஜக ஆட்சி செய்யும்போதுதான் அந்த அமைச்சரவையில் இருந்த ஜக்மோகன் என்ற அமைச்சர்தான் அண்ணாமலையார் ஆலயத்திற்கு வந்த சென்றபோது உடனே இந்த ஆலயத்தை தொல்பொருள் துறையின் மூலம் கையகப்படுத்தினார்.
அண்ணாமலையார் ஆலயத்தை காட்சிப் பொருளாக மாற்றி ஆலயத்தில் நடைபெறுகின்ற கார்த்திகை தீபம்¸ மாதம் ஒருமுறை நடைபெறும் பௌர்ணமி போன்ற நாட்களில் சுமார் 10லட்சம் முதல் 20லட்சம் வரை வருகின்ற பக்தர்களின் மனதை புன்படுத்துகின்ற இவர்களா ஆன்மீகத்தை வளர்ப்பவர்கள். கலைஞர் 2004 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வந்த போது திருவண்ணாமலையில் வாழுகின்ற பொதுமக்கள்¸ ஆன்மீகவாதிகள்¸ வியாபாரிகள்¸ வர்த்தக சங்கத்தை சார்ந்தவர்கள் என அனைவரும் வந்து அண்ணாமலையார் ஆலயத்தை தொல்பொருள் துறையிடமிருந்து மீட்டுதாருங்கள் என்று கேட்டனர்.
கோயிலை மீட்டோம்
மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது தொல்பொருள் துறை அமைச்சராக இருந்த ஜெயபால் ரெட்டியிடம் தொலைபேசியில் பேசி என்னை நேரடியாக அவரிடம் அனுப்பி மத்திய அரசாங்கத்தால் அண்ணாமலையார் ஆலயத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற செய்து அண்ணாமலையார் ஆலயத்தையே மீட்டுத்தர செய்தவர்தான் கலைஞர்.
கலைஞர் ஆட்சியில்தான் ரூ.8484கோடி செலவில் 432 கோயில்களுக்கு முடமுழக்கு செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் ஓடாத திருவாரூர் தேரையும் ஓடச்செய்தவர். கிராமபுறக் கோயில்களுக்கெல்லாம் பூசாரிகளை நியமித்து அனைத்து ஆலயங்களையும் புத்துணர்வு பெறச் செய்தவர. திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதுதான் தமிழகத்தில் கோவில்களுக்கெல்லாம் அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது. எனவே நாமா இந்துக்களுக்கு எதிரானவர்கள். அண்ணாமலையார் ஆலயத்தை தொல்பொருள் துறையின் மூலம் காட்சிப் பொருளாக்கிய பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வதன் மூலம் பாஜகவிற்கு பாடம் புகட்டவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி¸ நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார்¸ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.எஸ்.விஜயகுமார்¸ கே.மணிவர்மா¸ நகர தலைவர் டாக்டர் என்.வெற்றிச்செல்வன்¸ மதிமுக மாவட்ட செயலாளர் சீனி.கார்த்திகேயன் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
வேலுவின் பலிக்காது
எ.வ.வேலு பேசியது குறித்து பா.ஜ.க தரப்பு கூறுகையில் பா.ஜ.கவுடன் முன்பு கூட்டணி வைத்த கட்சிதான் திமுக. தேர்தல் நேரத்தில் ஏதோ இந்துக்களுக்கு துணை நிற்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வேலுவின் முயற்சி பலிக்காது என்றனர்.