Homeசெய்திகள்போலீஸ் துரத்திய வாலிபர் பிணமாக கிடந்தார்

போலீஸ் துரத்திய வாலிபர் பிணமாக கிடந்தார்

முரளி

மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீசார் துரத்தி பிடித்து அடித்து கொன்று விட்டதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை அடுத்த போளுர் அருகே உள்ளது வம்பலுர் கிராமம். இங்கு மண்டகொளத்தூர் பேட்டைதொப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி(30) தந்தை பெயர் முனியன். முரளிக்கு திருமணமாகி ஒன்னறை வருஷம் ஆகிறது. 1வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. விவசாயியான முரளி ஆற்று மணலை தனது சொந்த மாட்டு வண்டியில் கடத்தி விற்பனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

நேற்று முன்தினம் இரவு முரளி சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்தபோது போலீசார் அவரை தேடி ஊருக்குள் வந்து கொண்டிருப்பதாக போனில் தகவல் வந்தது. இதையடுத்து முரளி வீட்டிருந்து வெளியே வந்தார். போலீசார் நெருங்கி வருவதை பார்த்து தப்பித்து ஓடினார். வந்த 6 போலீசாரில் 2 போலீசார் அவரை துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு போலீசார் வீட்டில் இருந்த 3 மாட்டு வண்டிகளில் 2 மாட்டு வண்டியை எடுத்துச் சென்று விட்டார்களாம். 

குழந்தையுடன் முரளியின் மனைவி

தப்பி ஓடிய முரளியின் செல்லுக்கு அவரது மனைவி தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. காலையில் தொடர்பு கொண்ட போது அவரது போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் முரளியை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று மாலை வம்பலூர் ஆற்றங்கரை ஓரம் புதரில் முரளி பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து அங்கு வந்த அவரது உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். 

வம்பலூர் கிராமம் போளுர் போலீஸ் நிலையத்தின் எல்லைக்கு வருவதாகவும்¸ ஆனால் லஞ்சம் வாங்கும் நோக்கில் களம்பூர் போலீசார் 4 பேர் சீருடையிலும்¸ 4 பேர் சாதாரண உடையிலும் வந்ததாகவும்¸ முரளியை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து அடித்து கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். முரளியின் உடலை தரவும் அவர்கள் மறுத்து விட்டனர். 

எஸ்.பி பேச்சு வார்த்தை 

தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பிறகு போராட்டம் நடத்தியவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் உடலை தர முடியும் என முரளியின் உறவினர்கள் கூறி விட்டனர். 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் உடல் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டது. 

அதன்பிறகு முரளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தப்பி ஓடிய போது முரளி நிலத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இறந்து விட்டதாகவும்¸ நிலத்தின் உரிமையாளர் உடலை எடுத்து ஆற்றங்கரை ஓரம் போட்டு விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மின் வேலி அமைத்திருந்த விவசாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆனால் முரளியின் உறவினர்கள்¸ மின்வேலியில் சிக்கி முரளி இறக்கவில்லை¸ போலீசார் அடித்ததால்தான் இறந்ததாக கூறி பிரேத பரிசோதனை முடிந்த பிறகும் முரளியின் உடலை வாங்க மறுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

See also  பத்திர பதிவுக்கு ரூ.1000 வசூல்-தலைமைக்கு பறந்த புகாரால் வாபஸ்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!