Homeஅரசியல்வன்னியர் சங்கத் தலைவர் வருகை-போலீஸ் குவிப்பு

வன்னியர் சங்கத் தலைவர் வருகை-போலீஸ் குவிப்பு

வன்னியர் சங்கத் தலைவர் வருகை-போலீஸ் குவிப்பு

அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி வருகை தந்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  

நாயுடு மங்கலத்தில் 1 வாரத்துக்குள் அக்னி கலசத்தை வைக்காவிட்டால் போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும் என அரசுக்கு வன்னியர் சங்க தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989ஆம் ஆண்டு டாக்டர் ராமதாசால் திறந்து வைக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் சாலை விரிவாக்கத்திற்காகவும்¸ நிழற்குடை கட்டுவதற்காகவும் தற்காலிகமாக அகற்றப்பட்டது. 

சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி கலசம் நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள் ஒதுக்கித் தந்த இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. இந்நிலையில் புகார் வந்ததையடுத்து அந்த அக்னி கலசத்தை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்யவே பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அக்னி கலசம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் திடீரென்று இரவோடு இரவாக அந்த அக்னி கலசம் வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதை கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பிறகு விடுவித்தனர். 

அக்னி கலசம் நிறுவப்பட்ட இடத்தை பார்வையிடுவதற்காகவும்¸ திருவண்ணாமலையில் வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி இன்று வருகை தந்தார். இதனால் திருவண்ணாமலையில் இருந்து நாயுடுமங்கலம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாயுடு மங்கலத்தில் அக்னி கலசம் நிறுவப்பட்ட இடத்தை பார்வையிட்ட ப.தா.அருள்மொழி அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில் அக்னி கலசத்தை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் கணேசனும்¸ திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றி வேலும் சேர்ந்து அகற்றியுள்ளனர். இதன் மூலம் தேன் கூட்டில் கல்லெறிந்து உள்ளனர். இனி நாங்கள் தேனீக்களாய்  கொட்டுவோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம். இங்கு அக்னி கலசத்தை வைக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் வைக்க ஏற்பாடு செய்வோம் என்று குறிப்பிட்டார். 

வன்னியர் சங்கத் தலைவர் வருகை-போலீஸ் குவிப்பு

பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது¸

1989ம் ஆண்டு வன்னியர்கள் வாழும் இடமான இந்த இடத்தை அடையாளம் காட்டும் வண்ணம் வன்னியர்களின் உயிர்நாடியாக இருக்கக்கூடிய அக்னி கலசத்தை டாக்டர் ராமதாஸ் திறந்துவைத்தார். சாலை விரிவாக்கம் செய்து நிழற்குடை கட்டிய பிறகு மீண்டும் அதே இடத்தில் அக்னி கலசத்தை வைத்து தருகிறோம் என அதிகாரிகள் கூறியதால் பெருந்தன்மையுடன் அக்னி கலசத்தை அகற்ற ஒப்புக்கொண்டோம். அதன்பேரில் பணிகள் முடிவடைந்த பிறகு அக்னி கலசம் மீண்டும் நிறுவப்பட்டது. மந்திரி தூண்டுதலின் பேரில் அந்த அக்னி கலசத்தை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்¸ கோட்டாட்சியர் சேர்ந்து அகற்றியுள்ளது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ஒரு வார காலத்திற்குள் அக்னி கலசத்தை அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும். இன்று காந்தியை சுட்ட தினம். எங்க பசங்க கோட்சேவாக மாறிவிட்டார்கள் என்றால் எங்களை குறை சொல்லக்கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.கொலை¸ கொள்ளைகள் நடைபெற்று வருகிறது. வன்னியர்களுக்கு அளித்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எங்களது விளக்கத்தை கேட்காமல் இரண்டு நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் எதிரொலிக்கும்.  தனிப்பட்ட ஒரு ஜாதிக்கு கொடுக்கப்பட்ட சலுகை ரத்து செய்யப்படவில்லை. ஆனால் வன்னியர்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீடு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. நாங்கள் எல்லாம் இளிச்சவாயர்களா? திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு நாமம் போட்டு வருபவர்கள் என நினைத்து விட்டார்களா? அல்லது திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு அரோகரா என்று சொல்லி நாமம் போடும் கும்பல் என நினைத்து விட்டார்களா?  திருப்பதி ஏழுமலையானும்¸ அரோகராவும் எங்களவர்கள்தான். அமைதியாக இருப்போம். எங்கள் விவகாரத்தில் அத்துமீறி நடந்தால் அடக்குவோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாமக மாநில அமைப்பு செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் மாவட்ட செயலாளர்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம்¸ இல.பாண்டியன்¸ ஆ.வேலாயுதம்¸ ஆ.கணேஷ்குமார்¸ முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.பாபு கண்டர்¸ முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.காளிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். 

வன்னியர் சங்கத் தலைவர் வருகையையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா தலைமையில் 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

வன்னியர் சங்கத் தலைவர் வருகை-போலீஸ் குவிப்பு
வன்னியர் சங்கத் தலைவர் வருகை-போலீஸ் குவிப்பு

நாயுடு மங்கலத்தில் பா.ம.கவினர் திரண்டிருந்த மெயின் ரோட்டின் வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பா.ம.கவினர் பஸ் மீது கொடிகளை வீசினர். இதில் கொடி கட்டிருந்த சவுக்கு கட்டை பட்டு அரசு பஸ் ஒன்றின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து வாகன போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. பஸ் டிரைவர் கொடுத்த புகாரையடுத்து பா.ம.கவினர் மீது கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!