Homeசெய்திகள்உக்ரைனில் சிக்கித் தவிக்கும் திருவண்ணாமலை மாணவர்கள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் திருவண்ணாமலை மாணவர்கள்

பெற்றோர்¸ தங்கையுடன் பரத் யோகேஷ்
பெற்றோர்¸ தங்கையுடன் பரத் யோகேஷ்

திருவண்ணாமலையைச் சேர்ந்த 2 மாணவர்களும்¸ மாணவி ஒருவரும் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். 

அவர்களை உடனடியாக மீட்டு தரும்படி அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்யாவுக்கும்¸ உக்ரைனுக்கும் கடந்த 24 ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. உக்ரைனில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர்¸ இதில்1156 இந்தியர்கள் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ருமேனியா எல்லையை நோக்கி சென்றுள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் குளிரில் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் உக்ரைனில் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். அதில் திருவண்ணாமலை சேர்ந்த ஒரு மாணவரும்¸ மாணவி ஒருவரும் உள்ளனர்.

அந்த மாணவர் பெயர் பரத் யோகேஷ் (வயது 18). தந்தை பெயர் பாபு. தாயார் பெயர் ஜெயபாரதி. திருவண்ணாமலை வேங்கிக்கால் வானவில் நகரில் வசித்து வருகின்றனர். பாபு வேட்டவலத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். ஜெயபாரதி திருவண்ணாமலையில் வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன்¸ ஒரு மகள் உள்ளனர். ஒரே மகனான பரத் யோகேஷ்சை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ஏஜென்சி மூலம் உக்ரைனில் இருக்கும் கார்கிங் நகரிலுள்ள நேஷனல் மெடிக்கல் காலேஜ் ஆப் யுனிவர்சிட்டியில் மருத்துவ படிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் சேர்த்துள்ளனர்.

அங்கு போர் மூண்டதிலிருந்து பரத் யோகேஷ் உள்பட 200 பேர் பதுங்கு அறைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வேலை உணவு மட்டுமே கிடைத்து வருகிறது. அடிக்கடி கேட்கும் வெடிச்சத்தத்தால் தாங்கள் அச்சத்தில் உறைந்து இருப்பதாக தெரிவிக்கும் பரத் யோகேஷ் தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசும்¸ தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தங்களது ஒரே மகனை அரசு மீட்டுத் தரவேண்டும் என அவரது பெற்றோரும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தங்களுடன் உள்ள 200 பேரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சுஸ்திரியா என்ற மாணவியும் இருப்பதாக பரத் யோகேஷ் தெரிவித்தார். சுஸ்திரியா¸ திருவண்ணாமலை  தமிழ் மின் நகரை சேர்ந்தவர். இவரது தாயார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சாக உள்ளார். 

ருத்ரன் 

இதே போல் திருவண்ணாமலை வேங்கிக்கால் வானவில் நகரைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி) பணிபுரிந்து வரும் நாகராஜனின்  மகன் ருத்ரன் என்பவரும் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். ருமேனியா சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு வர அவர் உக்ரைனில் இருந்து 1500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயிலில் பயணம் செய்து வருவதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக தங்களது பிள்ளைகளை மத்திய¸ மாநில அரசுகள் பத்திரமாக மீட்டு தர வேண்டும் என சுஸ்திரியாவின் பெற்றோர்களும்¸ ருத்ரனின் பெற்றோர்களும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!