Homeஅரசு அறிவிப்புகள்அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு போட்டி

அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு போட்டி

அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு போட்டி

வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் ரூ.2 லட்சம் வரை பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள்,பொதுமக்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது¸ 

இந்தியத் தேர்தல் ஆணையம்¸ ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022-ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு¸ “எனது வாக்கு எனது எதிர்காலம் – ஒரு வாக்கின் வலிமை” என்ற  கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டியை தொடங்கியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் – (SVEEP) என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை இப்போட்டியில் பங்கேற்கச் செய்வதின் வாயிலாக மக்களாட்சியின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. 

இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். மக்களாட்சியில் ஒவ்வொருவாக்கும் முக்கியமானது என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மக்களின் ஏராளமான படைப்புகளை வரவேற்கிறது.

1. மையக்கருத்து:  “எனது வாக்கு எனது எதிர்காலம்- ஒரு வாக்கின் வலிமை”

2. தேசிய அளவிலான போட்டியில்¸ வினாடி-வினாப் போட்டி¸ வாசகம் எழுதும் போட்டி¸ பாட்டுப் போட்டி¸ காணொலிகாட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பர படவடிவமைப்புப்  போட்டி என ஐந்து பிரிவுகள் உள்ளன. 

வினாடி-வினாப் போட்டி: 

நாட்டின் தேர்தல் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வினை அளவிடும் பொருட்டு பங்கேற்பாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவேண்டும். போட்டிகளில் 3 நிலைகள் எளிதான¸ இடைநிலை மற்றும் கடினம் உள்ளன. போட்டியில் மூன்று நிலைகளும் நிறைவடைந்ததும்¸ பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின்னணு சான்றிதழி வழங்கப்படும்.

வாசகம் எழுதும் போட்டி: 

மேற்குறிப்பிட்ட கருப்பொருளில் பிறரை ஊக்கப்படுத்தும் வகையிலும் அனைவரையும் கவரக்கூடிய வகையிலும்¸ வாசகத்தை அமைத்து இப்போட்டியில் பங்கு பெறுங்கள்.

பாட்டுப்போட்டி: 

பாரம்பரிய இசைப் பாடல்கள்¸ தற்கால பாடல்கள்¸ ராப் (Rap) போன்ற யாதொரு வடிவத்திலும் ஒரு பாடலின் வாயிலாக படைப்பாற்றல் உள்ளவர்களின் திறமையையும்¸ ஆற்றலையும் வெளிக்கொண்டு வருவதை பாட்டுப் போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள கருப்பொருளின் அடிப்படையில் புதிய பாடல்களை உருவாக்கி இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கலைஞர்களும் பாடகர்களும் தங்கள் விருப்பப்படி எந்தவொரு இசைக்கருவியையும் பயன்படுத்தலாம். பாடலின் கால அளவு 3 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு போட்டி

காணொலிக்காட்சி தயாரிப்பு :

இந்தியத் தேர்தல்களின் பன்முகத்தன்மை மற்றும் தேர்தல் திருவிழாவை கொண்டாடும் வகையில் காணொலிக் காட்சி ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்து நிழற்படக் கருவி ஆர்வலர்களுக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. போட்டியின் கருப்பொருள் தவிர¸ பின்வரும்தலைப்பிலும்¸ போட்டியாளர்கள் காணொலி தயாரிக்கலாம்

தகவலறிந்த மற்றும் நெறிசார்ந்த வாக்களிப்பின் முக்கியத்துவம் (Informed and Ethical Voting) நேர்மையான வாக்களிப்பு¸  வாக்கின் வலிமை¸ பெண்கள்¸ மாற்றுத் திறனாளிகள்¸ மூத்த குடிமக்கள்¸ இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாகவும் இருக்கலாம். மேற்கண்ட கருப்பொருள் தொடர்பாக ஏதேனும் ஒன்றில் போட்டியாளர்கள் காணொலிக்காட்சி ஒன்றை உருவாக்கவேண்டும். அந்தக் காணொலிக் காட்சியானது ஒரு நிமிட கால அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.

காணொலி¸ பாடல் மற்றும் வாசகம் எழுதும் போட்டிகளுக்கான பதிவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு அலுவல் மொழியிலும் அளிக்கப்படலாம்.

விளம்பரப் படவடிவமைப்புப் போட்டி: 

இந்தப் போட்டியானது¸ சிந்தனையைத் தூண்டக்கூடிய விளம்பரப் படம் தயாரிக்கும் கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வமுடையவர்களுக்கானது. போட்டியாளர்கள் கருப்பொருள் குறித்த எண்மமுறை விளம்பரப் படம் (Digital Poster)¸ ஓவியம் அல்லது கையால் வரையப்பட்ட விளம்பரப் படத்தினை சமர்ப்பிக்கலாம்.

போட்டி வகைபாடுகள்:

நிறுவனம் சார்ந்த நபர்களுக்கான போட்டி வகை (Institutional) என்பது¸ தொடர்புடைய மத்திய அல்லது மாநில அரசு சட்டத்தின் கீழ் பதிவுப்பெற்ற பள்ளிகள்¸ கல்லூரிகள்¸ பல்கலைக் கழகங்கள் போன்ற கல்வியியல் நிறுவனங்கள், அமைப்புகள் என பொருள்படும்.

தொழில் சார்ந்தவர் வகை (Professional) என்பது¸ காணொலிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப்படம் வடிவமைத்தல், பாடுதல் போன்ற ஏதேனும் ஒரு தொழிலினை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் அல்லது காணொலிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப்படம் உருவாக்குதல், பாடுதல்  போன்ற தொழில்களில் யாதொரு விதத்திலாவது பணிபுரிந்து முதன்மை வருவாய் ஈட்டக்கூடியவர்கள் தொழில் சார்ந்தவர்களுக்கான வகை என்று கருதப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் தொழில் சார்ந்தவர் வகை என்பதை உறுதி செய்யும் பொருட்டு அதற்குரிய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தொழில்சாராதவர் வகை (Amateur)  என்பது காணொலிக்காட்சி உருவாக்குதல், விளம்பரப் படம் வடிவமைத்தல், பாடுதல் போன்றவற்றை ஆக்கப்பூர்வமான ஒரு பொழுது போக்கிற்காக மேற்கொண்டு¸ ஆனால் தனது முதன்மை வருமானத்தை வேறு சில வழிகளில் இருந்து ஈட்டும் போட்டியாளர் பங்கேற்கும் வகை¸ தொழில்சாராதவர் வகை எனக் கருதப்படும்.

விருதுகள், அங்கீகாரங்கள்:

பாட்டுப் போட்டி¸ காணொலிக்காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பரப் படம் வடிவமைப்பு போட்டி ஆகியவை நிறுவனம் சார்ந்த நபர்கள்¸ தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில் சாராதவர் ஆகிய மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு அற்புதமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அது மட்டுமின்றி¸ ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க சிறப்புப் பிரிவின் கீழ் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். நிறுவனம் சார்ந்த நபர்கள் என்ற பிரிவில் 4 சிறப்புப் பரிசுகளும்¸ தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில்சாராதவர் என்ற பிரிவில் தலா 3 சிறப்புப்பரிசுகளும் வழங்கப்படும்.

அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு போட்டி

வாசகம் எழுதும் போட்டி

முதல் பரிசு – ரூ. 20¸000. இரண்டாம் பரிசு – ரூ. 10¸000.  மூன்றாம் பரிசு-ரூ. 7¸500. ஐம்பது பங்கேற்பாளர்களுக்கு தலா ரூ. 2000 மதிப்புடைய சிறப்புப்பரிசு.

வினாடி -வினாப் போட்டி

வெற்றியாளர்களுக்கு  ஊக்கப்பரிசாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிசுப்பொருள் மற்றும் அடையாள வில்லை வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும்¸ போட்டியின் மூன்று நிலைகளை நிறைவு செய்ததன்பேரில் மின்னணு சான்றிதழைப் பெறுவார்கள்.

நடுவர் மன்றம்

பல்வேறு பிரிவுகளில் உள்ள போட்டிகளுக்கான பதிவுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தால் தீர்மானிக்கப்படும். போட்டிகளை மறுமதிப்பீடு செய்வது தொடர்பான கோரிக்கைகள் எதுவும் கருத்தில் கொள்ளப்படமாட்டாது .

பங்கேற்பதற்கான வழிமுறைகள்

பங்கேற்பாளர் போட்டியின் விரிவான வழிகாட்டுதல்கள்¸ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https://ecisveep.nic.in/contest/ என்ற வலைதளத்தில் பார்வையிடலாம்.

பங்கேற்பாளர்கள்¸ போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை voter-contest@eci.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பங்கேற்பாளர்கள் தாங்கள் விண்ணப்பிக்க இருக்கும் போட்டியின் பெயர்¸ மற்றும் பிரிவு¸ ஆகியனவற்றை மின்னஞ்சலின் பொருள் (Subject) பகுதியில் தெளிவாகக் குறிப்பிடவேண்டும்.

வினாடி -வினாப் போட்டியில் பங்கேற்பதற்கு¸ பங்கேற்பாளர்கள் போட்டிக்கான வலைதளத்தில் பதிவு செய்யலாம். மேற்குறிப்பிட்ட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டித் தொடர்பான அனைத்துப் பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து¸ 31.03.2022-ஆம் தேதிவரை       voter-contest@eci.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கவேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு போட்டி

வருகிற 28.03.2022 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மேற்குறிப்பிட்ட போட்டிகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ளும் விதமாக சிறப்பு நாளாக கடைபிடிக்கப்படும். 

மேற்குறிப்பிட்ட போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பள்ளி¸ கல்லூரி மாணவ¸ மாணவியர்கள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்களும் காலநீட்டிப்பினை பயன்படுத்தி பெருமளவில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!