கொரோனா ஒழிய வேண்டிக் கொண்டு திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம் செய்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். சித்ரா பவுர்ணமி அன்றும் கார்த்திகை தீப பௌர்ணமி அன்றும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள்.
சென்ற ஆண்டு முதல் கொரோனா தோற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவல பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கிரிவலம் செல்ல முடியாமல் இருப்பது பக்தர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் ஆந்திரா மாநிலம் பீமவரம் ஊரைச் சேர்ந்த மாதவி என்பவர் கொரோனா வைரஸ் ஒழிய அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு இன்று அங்கப்பிரதட்சணம் செய்தார்.
45 வயதாகும் மாதவி¸ ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். தீவிர சிவ பக்தரான இவர் பாடல் பெற்ற சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் 15 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி விட்டார். தனது பெயருக்கு முன்னால் அருணாச்சலம் என்பதையும் சேர்த்துக் கொண்டு ஆன்மீக பணியாற்றி வருகிறார்.
அன்னதானம்¸ வஸ்திரதானம் வழங்கி ஆன்மீக சேவையாற்றி வரும் அருணாச்சல மாதவி ஏழை மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறார். மேலும் 63 நாயன்மார்கள் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறார்.
பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்குச் சென்று உலக நன்மைக்காக அங்கப்பிரதட்சணம் செய்துள்ள அருணாச்சல மாதவி திருவண்ணாமலையிலும் 3 முறை அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறார். இன்று 4வது முறையாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் குணமடைந்து சுபிட்சமாக வாழ திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தார்.
“அருணாச்சலம்¸ அருணாச்சலம்” என்ற பக்தி முழக்கத்துடன் சுட்டெரிக்கும் வெயிலில் அவர் அண்ணாமலையார் மலையை சுற்றி உருண்டு வந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் உலக மக்கள் எல்லாம் 2 வருடமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மதிப்புமிக்க உயிர்கள் பறி போய் விட்டது. இது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. இனிமேல் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடாது என அண்ணாமலையாரை வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்துள்ளேன். என்றார்.