Homeசெய்திகள்திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல் விழா

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல் விழா

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல்  விழா

திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடியில்¸ கூவாகத்தை போன்று திருவிழா நடைபெற்றது. இதில் பூசாரி கைகளால் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனர். 

பழமை வாய்ந்த கோயில் 

திருவண்ணாமலையிலிருந்து மங்கலம் செல்லும் வழியில் உள்ளது வேடந்தவாடி கிராமம். இங்கு 200 ஆண்டுகளுக்கு முந்தைய கூத்தாண்டவர் கோயில் உள்ளது. அந்த காலத்தில் ஆடு¸ மாடுகள் அதிக அளவில் திருடு போயின. இதை தடுத்து எல்லை தெய்வமாக இருந்து கூத்தாண்டவர் விலங்குகளையும்¸ மக்களையும் காப்பாற்றினார். இதைத் தொடர்ந்து கூத்தாண்டவருக்கு ஒவ்வொரு வருடமும் விழா எடுத்து சிறப்பிக்கப்படும். அப்போதெல்லாம் 5 வருடங்கள் நடத்தப்பட்ட மகாபாரத தொடர் சொற்பொழிவு காலப்போக்கில் 20 நாட்கள் என குறைந்து விட்டது. 

அரவான் பலி

மகாபாரத போரில் உயிரை தியாகம் செய்ய முன் வந்த அரவானை பலி கொடுக்கும் முன்னர் அரவானின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் அவனை மோகினி அவதாரமெடுத்து கிருஷ்ணர் மணந்து கொண்டார். ஆசை நிறைவேறியதும் அரவான் பலி கொடுக்கப்பட, மோகினி விதவையானாள். இதை நினைவு கூறும் வகையில் அரவானின் வடிவமான கூத்தாண்டவருக்கு திருவிழா நடத்தப்படுகிறது. வேடந்தவாடியில் எல்லை காவல் தெய்வமாக விளங்கி வரும் கூத்தாண்டவரை அவலூர்பேட்டை¸ மங்கலம்¸ பூதமங்கலம்¸ கீழ்பென்னாத்தூர்¸ ஆர்ப்பாக்கம்¸ எரும்பூண்டி உள்பட 50 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிராம மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்களோடு சேர்த்து திருநங்கைகளும் மோகினியாக தங்களை நினைத்து தாலி கட்டுதல்¸ தாலி அகற்றுதல் என கூவாகம் போல் சடங்குகளை செய்து வழிபட்டு வருகின்றனர். 

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல்  விழா

125ம் ஆண்டு திருவிழா

கூவாகத்தை அடுத்து இங்குதான் சித்திரை மாத திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 125வது ஆண்டாக திருவிழா நடைபெற்றது. மகாபாரதத் தொடர் சொற்பொழிவுடன் கடந்த 1ந் தேதி விழா தொடங்கியது. அன்று இரவு வாணவேடிக்கையுடன் சாமி திருவீதி உலா நடைபெற்றது. 10ந் தேதி பாஞ்சாலி திருமண விழாவும்¸ 11ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பும்¸ நடந்தன. 

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல்  விழா

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல்  விழா

அழகிப் போட்டி

18ந் தேதி திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மும்பை¸ சென்னை¸விழுப்புரம்¸ திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 150 திருநங்கைகள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உடையான புடவையில் திருநங்கைகள் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த வித்திவிக்கா முதல் பரிசான ரூ.3 ஆயிரத்தையும்¸ அவந்திகா 2வது பரிசான ரூ.2ஆயிரத்தையும்¸ கனிமொழி 3வது பரிசான ரூ.1000த்தையும் பெற்றனர். 

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல்  விழா

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல்  விழா

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல்  விழா

மணமகள் அழைப்பு 

திருநங்கைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர்¸ பெண் அழைப்பு¸ திருநங்கைகளுக்கான திருமணச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராம மக்கள் சீர்வரிசைகளை சுமந்து ஊர்வலமாக சென்றனர். மூத்த திருநங்கைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதைத் தொடர்ந்து கூத்தாண்டவருக்கு முன் பூசாரி கையால் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனர்.

இன்று முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி¸ விநாயகர்¸ கூத்தாண்டவர்¸ காமாட்சியம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேக¸ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து¸ 3 சாமிகளும் மலர்களால் அலங்கரித்து¸ தேர்களில் வைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை வேடந்தவாடியிலும் கூவாகம் போல்  விழா

தேரோட்டம் 

அதன்பிறகு தேரோட்டம் தொடங்கியது. பூக்களால் ஜோடிக்கப்பட்ட கிரகம் முன்னால் செல்ல விநாயகர் தேர்¸ கூத்தாண்டவர் தேர்¸ காமாட்சியம்மன் தேர் என தேர் என 3 தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வீதி உலா வந்தன தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடனைச் செலுத்தி¸ வழிபட்டனர். 

இரவு திருநங்கைகளின் தாலிகளை அறுத்து ஒப்பாரி வைத்து அழும் நிகழ்வு நடைபெற்றது. 8 மணியளவில் கூத்தாண்டவருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. 

விழாக்குழு

சி.என்.அண்ணாதுரை எம்பி¸ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோபால்¸ துரிஞ்சபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை¸ மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சகாதேவன்¸ ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுமதி ஆறுமுகம்¸ பிரபாகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் நா.மன்னன்¸ விழா ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஆறுமுகம்¸ ஆர்.காண்டீபன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!