திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடக்க¸ நடுநிலை¸ உயர்நிலை¸ மேல்நிலைப்பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் ரூ.7ஆயிரத்து 500¸ ரூ.10ஆயிரம்¸ ரூ.12ஆயிரம் மதிப்பூதியத்தில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தற்காலிக ஆசிரியர்களாக தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட ஐகோர்ட்டு இந்த நியமனங்கள்¸ இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்திருந்தது.
இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்¸ ஊராட்சி ஒன்றிய¸ நகராட்சி¸ அரசு தொடக்க¸ நடுநிலை¸ உயர்நிலை¸ மேல்நிலைப்பள்ளிகளில் 2022-203ஆம் கல்வியாண்டில் 01.06.2022 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை¸ பட்டதாரி¸ முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் (District Educational officer) சமர்ப்பிக்க வேண்டும்.
இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி¸ மாவட்டக்கல்வி¸ வட்டாரக் கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்புப் பலகையில் 02.07.2022 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 06.07.2022 மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலகம்¸ மாவட்ட ஆட்சியர் வளாகம் (காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம்)¸ திருவண்ணாமலை¸ மின்னஞ்சல் deotvm@gmail.com என்ற முகவரியிலும்¸ மாவட்ட கல்வி அலுவலகம்¸ செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்¸ செய்யாறு¸ மின்னஞ்சல் cheyyardeo@gmail.com என்ற முகவரியிலும்¸ மாவட்ட கல்வி அலுவலகம்¸ ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்¸ ஆரணி¸ மின்னஞ்சல் deoarni2018@gmail.com என்ற முகவரியிலும்¸ மாவட்ட கல்வி அலுவலகம்¸ வட்டார வள மைய வளாகம்¸ போளுர்¸ மின்னஞ்சல் deopolur@gmail.com என்ற முகவரியிலும்¸ மாவட்ட கல்வி அலுவலகம்¸ செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்¸ செங்கம்¸ மின்னஞ்சல் deochengam@gmail.com என்ற முகவரியிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.