திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் குரலிசை¸ நாதசுரம்¸ தவில்¸ தேவாரம்¸ பரதநாட்டியம் என 7 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி 2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை¸ நாதசுரம்¸ தவில்¸ தேவாரம்¸ பரதநாட்டியம் என ஏழு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆண்¸ பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம்.
குரலிசை¸ பரதநாட்டியம்¸ வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கு சேர்க்கை பெற குறைந்த பட்சம் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம்¸ தவில்¸ தேவாரம் ஆகிய பாடங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதுமானது. ஆண்டுக்கு ரூ.350 பயிற்சிக்கட்டணம் செலுத்த வேண்டும். மாதா மாதம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை ரூ.400 வீதம் வழங்கப்படும்.
அரசு பேருந்துகளில் பள்ளி வேலை நாட்களுக்கு இலவச பயணச் சலுகை பெறலாம். மூன்று ஆண்டு கால சான்றிதழ் படிப்பாகும். தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதியில் தங்கிப் பயில வழிவகை செய்து கொடுக்கப்படும்.
இசைப்பள்ளியில் சேர விரும்பும் மாணவ- மாணவியர்கள், தலைமை ஆசிரியர்¸ மாவட்ட இசைப்பள்ளி¸ சமுத்திரம் கிராமம்¸ கிரிவலப்பாதை¸ செங்கம் சாலை¸ நேருயுவகேந்திரா பின்புறம்¸ திருவண்ணாமலை 606 603 என்ற முகவரியிலும் 04175-235545¸ 9840068733 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.