கும்மியடித்து, நடனமாடி கிரிவலம் வந்த சிவனடியார்கள்
![](https://i0.wp.com/www.agnimurasu.com/wp-content/uploads/2022/08/FB_IMG_1661070437317-1.jpg?resize=696%2C383&ssl=1)
திருவண்ணாமலையில் தேவாரம், திருவாசகம் பாடி, சங்குநாதம் இசைத்து, கும்மியடித்து, நடனமாடி சிவனடியார்கள் கிரிவலம் சென்றனர்.
கைலாயத்தில் இருந்து உலகையே காத்து அருள்புரியும் அன்னை பார்வதிதேவி தவம் செய்ய தேர்ந்தெடுத்த இடம் தென்கைலாயமாகிய திருவண்ணாமலைதான். இறைவன் தன் தவத்தின் மூலம் மகிழ்வித்து இறைவனின் உடலில் இடது பாகத்தை பெற்று ஆண், பெண் இருவரும் சமம் என்று உலகிற்கு உணர்த்திய இடம் திருவண்ணாமலை.
மலை வடிவில் அண்ணாமலையார்
நினைத்தாலே அருளை வாரி வழங்கிடும் அண்ணாமலையாரே மலை வடிவில் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். கிரிவலப்பாதையில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும் மலையை சுற்றிலும் தவம் செய்து கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களின் கர்ம வினைகள், கஷ்டங்கள், துன்பங்கள் நீக்கி அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றி அருள்பாலித்து வருகின்றனர்.
அஷ்டலிங்கங்கள்
இத்தகைய சிறப்பு வாய்ந்த புண்ணிய சேத்தரமாகிய திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து எட்டு நவக்கிரகங்களை குறிக்கும் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் ஆகியவற்றை தரிசித்து தங்களது பிரச்சனைகளை போக்கிக் கொள்கின்றனர்.
![](https://i0.wp.com/www.agnimurasu.com/wp-content/uploads/2022/08/FB_IMG_1661070508212-1.jpg?resize=696%2C686&ssl=1)
இதில் சிவனடியார்கள் கிரிவலம் வருவதில் வித்தியாசமான முறையை கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமை திருவண்ணாமலை பேகோபுரத்தெருவில் உள்ள சிவசிவ மடத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிவனடியார்கள் வருகை தந்து ஒன்று சேருகின்றனர். அங்கிருந்து ஒன்றாக கிரிவலம் செல்கின்றனர்.
3வது சனிக்கிழமை
நேற்று 3வது சனிக்கிழமையை முன்னிட்டு 250க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிவசிவ மடத்திற்கு வருகை தந்தனர். இரவு அண்ணாமலையார் கோயிலில் சாமி பள்ளியறை பூஜையை தரிசித்து விட்டு கிரிவலம் சென்றனர். அப்போது தேவாரம், திருவாசகம் பாடி, சங்குநாதம் இசைத்து கொண்டு, அஷ்டலிங்கங்களை தரிசித்து ஆடி பாடி கிரிவலம் வந்தனர்.
![](https://i0.wp.com/www.agnimurasu.com/wp-content/uploads/2022/08/FB_IMG_1661070466723-1.jpg?resize=696%2C464&ssl=1)
திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் பெருமான் திருவெம்பாவையை இயற்றியதையொட்டி அடிஅண்ணாமலையில் உள்ள மாணிக்கவாசகர் கோயிலில் அடியார்கள் அனைவரும் திருவெம்பாவை பதிகம் ஓதினர். மேலும் திருபொற்சுண்ணம் பதிகத்திற்கு(திருப்பொற்சுண்ணம் என்பது நறுமண பொடி. இறைவனுக்கு திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்த பாடுவது போல் மாணிக்கவாசகர் தில்லையில் அருளிய பாடல்) கும்மி அடித்து நடனமாடினர். கிரிவலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பினர்.
கைகூடும் திருமணம்
![](https://i0.wp.com/www.agnimurasu.com/wp-content/uploads/2022/08/FB_IMG_1661070434168-1.jpg?resize=696%2C423&ssl=1)
இந்த வித்தியாசமான கிரிவலத்திற்கு ஏற்பாடு செய்திருந்த சிவனடியார் மணிகண்டனிடம் இதுபற்றி கேட்ட போது திருவெம்பாவை ஓதியும், கும்மி அடித்து நடனமாடியும் 43வது மாதமாக கிரிவலம் வந்திருக்கிறோம். திருவெம்பாவை மட்டுமன்றி எங்களுடன் கிரிவலம் வருபவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் பல்வேறு கோயில்களில் பாடப்பெற்ற பாடல்களை பாடி கிரிவலம் வருகிறோம். உதாரணமாக திருமணம் கூடிவர திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பாடப்பெற்ற தேவராப்பாடலை பாடுவோம். இதன்மூலம் 2 அல்லது 3வது மாதத்தில் அவர்களுக்கு திருமணம் கைகூடுவதை கண்கூடாக பார்க்கலாம். இதே போல் எங்களுடன் கிரிவலம் வருபவர்களின் பல்வேறு பிரச்சனைகள் ஈசனின் பரிபூர்ண அருளால் தீருகிறது என்றார். (மணிகண்ட அடிகளார் செல் நெ.7708484945)