தீபாவளி பலகாரத்தில் குறைபாடா? புகார் தெரிவிக்கலாம்
தீபாவளி பலகாரத்தில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்க செல் போன் நம்பரை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.
தீபாவளி (diwali) பண்டிகை கால பலகாரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்பவர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,
தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நமது நாட்டில் அனைத்து விதமான உணவு விற்பனைகளும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள் காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும் சொந்த பந்தங்களுக்கு அன்பாக அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.
சுகாதார முறையில்
தீபாவளி (diwali) பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்க கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி உணவு பொருளின் பெயர் தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாடு காலம் (காலவதியாகும் காலம்) சைவம் மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உரிமம் பெற வேண்டும்
உணவுப் பொருட்களை ஈக்கள் பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் உணவு தயாரிப்பாளர்கள் அனைவரும் முறையான (FOSTAC) பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும்.
பொது மக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாட்ஸ்அப் எண்
மேலும் இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் பொது மக்கள் உணவுப் பொருள் சம்பந்தமாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலரிடமோ புகார் தெரிவிக்கலாம்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.