சூரிய கிரகணம்-அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.
அக்னி ஸ்தலம்
கிரகணங்களின் போது கோயில்களின் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை, காளஹஸ்தி கோயில்களின் நடை சாத்தப்படாமல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை விளங்குவதாலும், சூரிய மண்டலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் சக்தி உடையதாக காளஹஸ்தி விளங்குவதாலும் கிரகணத்தின் போது இக்கோயில்களின் நடைசாத்தப்படுவது இல்லை.
தரிசனத்திற்கு அனுமதி
இன்று சூரிய கிரகணத்தையொட்டி அண்ணாமலையார் கோயில் நடை சாத்தப்படாமல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் சூரிய கிரகண நேரமான மாலை 5-17 முதல் 6-24 மணி வரை அண்ணாமலையார் கோயிலில் சாமிகளுக்கு அபிஷேகமோ, தீபாராதனையோ நடைபெறவில்லை.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் துவங்கும் போதும், சந்திர கிரகணம் முடியும் போதும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி(சாமிக்கு நடைபெறும் நீராட்டு உற்சவம்) நடைபெறுவது வழக்கம். அதன்படி சூரிய கிரகணம் துவங்கிய நேரமான மாலை 5-17 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.
மகா தீப ஆராதனை
பிறகு அஸ்திர தேவதைக்கு பச்சரிசி மாவு அபிஷேக பொடி பால் தயிர் விபூதி சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இறுதியாக புனித நீரை ஊற்றி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீப ஆராதனை நடைபெற்றது.
பக்தர்கள் காத்திருப்பு
தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் கூட்டம் மிகுதியாக இருந்ததால் சிறப்பு மற்றும் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.