Homeசெய்திகள்திருவண்ணாமலை கோயிலில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

திருவண்ணாமலை கோயிலில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

திருவண்ணாமலை கோயிலில் மகாதீபத்தன்று அங்கீகாரம் இல்லாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

6ந் தேதி மகாதீபம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ந் தேதி மகாதேரோட்டமும் வரும் 6ந் தேதி அதிகாலை 4 மணியளவில் கோவிலில் பரணிதீபமும் அன்று மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இந்த கார்த்திகை தீபத்திருவிழாவைக் காண உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு அடிப்படை வசதிகளும், காவல்துறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ந் தேதி மகாதீபம் வருவதால் திருவண்ணாமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கலெக்டர் பா.முருகேஷ், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜி சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், கோட்டாட்சியர் மந்தாகினி, கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், நகராட்சி ஆணையாளர் ரா.முருகேசன் ஆகியோர் சென்றிருந்தனர்.

பிறகு டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அங்கீகாரம் இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை-டிஜிபி

திருவண்ணாமலைக்கு வரக்கூடிய நான்கு முக்கிய சாலைகளிலும் செக்போஸ்ட் அமைத்து சோதனை நடத்தி வருகிறோம். 52 இடங்களில் வாகனங்களை நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. 12 ஆயிரம் பஸ்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.

போலி பாஸ்கள்

பாதுகாப்பு பணியில் ஐஜி கண்ணன் தலைமையில் 27 எஸ்,பி, 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். கோயிலுக்கு வரக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் பாஸ்சில்  பார் கோடு இருக்கும். அதை சோதனை செய்து தான் உள்ளே அனுப்புவோம். போலி பாஸ்கள் இதன் மூலம் தடுக்கப்படும்.

பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்து செல்லும் அளவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

குற்றங்களை தடுக்க 38 மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர். இவர்கள் சாதாரண உடையில் சுற்றி கொண்டிருக்கிறார்கள். எந்தவிதமான திருட்டு சம்பவங்கள் நடைபெறாமலும், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பாக வந்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நவீன கேமராக்கள்

500 புதிய கேமராக்களை பொருத்தி உள்ளோம். இவை அனைத்தும் நவீன கேமராக்கள். குற்றவாளிகளை இந்த கேமராக்கள் கண்டுபிடித்து விடும். காவலர்கள் மொபைல் போனிலும் இந்த ஆப் உள்ளது. அதை வைத்து வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட முடியும்.

கோயிலுக்குள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டம் வர வர அவர்களை பிரித்து உள்ளே அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். அதிக பாதுகாப்புக்குரிய விஐபிகள் வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். கவர்னர் வருகை குறித்து இப்போது தகவல் சொல்ல முடியவில்லை.

அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு தடை

ஒவ்வொரு வருடமும் எந்த அளவுக்கு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்களோ அதே அளவு இந்த முறையும் அனுமதிக்கப்படுவார்கள். பாஸ் கிடைத்தவர்கள் எந்த தடையும் இன்றி உள்ளே வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும். அனுமதி இன்றி உள்ளே அழைத்து வரப்படுவதை தடுக்க ஆலோசனை நடத்தியுள்ளோம்.

பாஸ் போன்ற அங்கீகாரம் ஏதுமில்லாத நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு துறையும் இதை பின்பற்ற வேண்டும் என அறிவுரை அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!