Homeசெய்திகள்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர்- கம்பன் பங்கேற்பு

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர்- கம்பன் பங்கேற்பு

திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டரும், அமைச்சர் மகன் கம்பனும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது அடிப்படை வசதி கேட்டு ஒரு சிலர் போராட்டம் நடத்த முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக தண்ணீர்; தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் பறையம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிலையில் சாலை, மேநீர் தேக்கத் தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் ஒரு சிலர் கலெக்டர், கம்பன், அதிகாரிகள் வரும் வழியில் எலிக்குத்தி என்ற பகுதியில் போராட்டம் நடத்த முயன்றனர். இதைக் கேள்விப்பட்டதும் ஒன்றிய செயலாளரும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான ரமணன் அந்த இடத்திற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தினார். போராட்டம் நடத்தியவர்களில் சிலர் திமுகவினர் என சொல்லப்படுகிறது.

கலெக்டர் முருகேஷ், கம்பன் ஆகியோர் தச்சம்பட்டு வழியாக பறையம்பட்டிற்கு வந்தனர். முதலில் வந்து விட்ட கலெக்டர், கம்பன் வருகைக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காத்திருந்தார். அதன் பிறகு கம்பன் வந்ததும் கிராம சபை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர்- கம்பன் பங்கேற்பு

கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது,

ஒரு கிராமத்தில் குடிநீர் தேவை, கழிவறை போன்ற சுகாதார வசதி, அடிப்படை வசதிகள் போன்றவை கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரும். இப்போது கிராம வளர்ச்சி திட்டத்தை துவக்கி இருக்கிறோம். இத் திட்டத்தின் படி கிராமத்திற்கு என்ன தேவை என்பதை கணக்கெடுக்க வேண்டும். அடுத்த மூன்றாண்டுக்கு கிராம வளர்ச்சி திட்டம் தான் பேசும்.

கடந்த முறை இத் திட்டத்தில் நிறைய விடுபட்டுள்ளது. இனி கிராம வளர்ச்சி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு கிராமத்தில் ரோடு வேண்டுமா? மேநீர் தேக்கத் தொட்டி வேண்டுமா? அங்கன்வாடி வேண்டுமா? இவையெல்லாம் நீங்கள் இந்த கிராம வளர்ச்சி திட்டத்தில் கொண்டு வந்தால் தான் அதற்கு திட்டம் தயாரித்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.

கடந்த ஆண்டுகளில் இந்த கிராம வளர்ச்சி திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கிராமத்துக்கு நிதி வரவில்லை என்றால் இது யாருடைய தவறு? ஒரு கிராமத்திற்கு சரிவர கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தால்தான் அந்த கிராமத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். கலெக்டரிடம் வந்து எங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?.

நிதி வந்தால் ஊராட்சிகளின் தேவைகள் அறிந்து தான் பிரித்துக் கொடுக்கப்படும். நமது மாநிலத்துக்கு எப்படி பட்ஜெட் தாக்கல் செய்கிறோமோ அது போல தான் இதுவும்.

இன்டர்நெட் இணைப்பு கொடுப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு முன்பு எல்காடு நிறுவனம் தான் 1 எம்பிபிஎஸ் அளவில் குறைந்த ஸ்பீடில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்தார்கள். இப்போது 2ஜிபி 3ஜிபி வேகத்துக்கு இந்த பைபர் கேபிள் வழியாக இணைப்பு கொடுக்கின்றனர். இந்த கேபிள் கிராமம் வரைக்கும் செல்லும்.

நமது மாவட்டத்தில் இந்த கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 12 ஒன்றியங்களில் இப்பணியை ஆரம்பித்து விட்டார்கள். இப்பணி முழுமையடைந்தால் சென்னையில் இருந்து தமிழக முதலமைச்சரே இங்கு உட்கார்ந்து ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவரிடம் பேச முடியும். இன்டர்நெட் வந்து விட்டால் எல்லா வளர்ச்சியும் தானாக வந்துவிடும் விழிப்புணர்வும் வந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து கலெக்டர், கம்பன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

கூட்டத்தில் ஊராட்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன், திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் ரமணன், மாவட்ட கவுன்சிலர் ஞானசௌந்தரி மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி (தேமுதிக) மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர்- கம்பன் பங்கேற்பு

கூட்டம் முடிந்து வெளியே வந்த கம்பன், திமுக நிர்வாகிகளை அழைத்து உங்கள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது அவரிடம் ஒரு திமுக நிர்வாகி இது வரை எலிக்குத்திக்கு செல்லும் ரோடே போடவில்லை. குடிநீர் இல்லை. தெரு விளக்கு ஒன்று கூட எரியவில்லை. ஓட்டு கேட்க மட்டும் வருகிறீர்களே? என மக்கள் கேட்கின்றனர். என்று சொன்னார். அப்போது அவரை அங்கிருந்தவர்கள் அடக்கினர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!