Homeசெய்திகள்முதியவரை தாக்கி பணம்-நகை கொள்ளை

முதியவரை தாக்கி பணம்-நகை கொள்ளை

கீழ்பென்னாத்தூரில் நள்ளிரவில் வீட்டின் கதவைத் தட்டி முதியவரை கம்பியால் தாக்கி பணம், நகையை கொள்ளையடித்துக் கொண்டு சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (வயது 67). மனைவி பெயர் பிருந்தா. 1மகள் உள்ளார். இவர் திருமணம் ஆகி மாமியார் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் வெங்கடாஜலபதியும், பிருந்தாவும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். வெங்கடாஜலபதி தனது வீட்டின் ஒரு பகுதியில் மாவு மிஷின் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு கணவனும்,மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு கடையின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு கணவன்-மனைவியும் கதவை திறந்து வந்து பார்த்தனர். உடனே பதுங்கி இருந்த முகமூடி அணிந்திருந்த 3 பேர் வெங்கடாசலபதியையும், பிருந்தாவையும் உள்ளே தள்ளிச் சென்று கம்பியால் தாக்கி பிருந்தாவின் கழுத்தில் இருந்த தாலி, காதில் இருந்த கம்பல் ஆகியவற்றை பறித்தனர்.

பிறகு மர்ம நபர்கள்  பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 2.5 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 70 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர். சத்தம் போட்டால் குத்தி விடுவோம் என மிரட்டியதால் வெங்கடாஜலபதியும், பிருந்தாவும் பயத்தில் செய்வதறியாது நின்றிருந்தனர்.

அதன் பிறகு அவர்களை உள்ளே வைத்து வெளிப்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்டு கொள்ளையர்கள் எஸ்கேப் ஆனார்கள்.

அதிகாலை அந்த பக்கமாக வந்தவர்கள் வீட்டிலிருந்து சத்தம் வரவே பூட்டை திறந்து அவர்களை வெளியே வரவழைத்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது சம்பந்தமாக கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இது சம்பந்தமாக கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. புறநகர் பகுதியில் வீடுகள் முளைத்துள்ளன. எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நள்ளிரவில் முதியவரை தாக்கி பணம்- நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!