சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் பிரிட்ஜ் வெடித்து சிதறி ஆய்வக அறை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் போளுர் ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பழைய கட்டிடத்தில் மருந்து குடோன் மற்றும் ஆய்வக அறை இயங்கி வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் ஆய்வக அறையில் இருந்த பிரிட்ஜ் டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. மேலும் அந்த அறையில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.
அப்போது பணிக்கு வந்த லேப் ஆய்வாளர் புஷ்பநாதன், தீபிடித்து புகை வருவதை பார்த்து லேப் அறையை திறந்து தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்தி தீ பரவாமல் தடுத்தார். பிறகு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அகற்றினர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தினால் பிரிட்ஜ்ஜில் இருந்த கெமிக்கல்கள், மருந்துகள் மற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாகின.
புதிய கட்டிடத்தில் உள்நோயாளிகளும், புற நோயாளிகளும் இருந்ததால் அதிர்ஷடவசமாக யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.