Homeசெய்திகள்மாணவர்களிடையே தகராறு-பஸ் சிறைபிடிப்பு

மாணவர்களிடையே தகராறு-பஸ் சிறைபிடிப்பு

திருவண்ணாமலை அருகே பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை போராட்டமாக மாறியது. சாலை மறியல், பஸ் சிறைபிடிப்பு என கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கீக்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாலை 8ம் வகுப்பு மாணவர்களுக்காக ஸ்மார்ட் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனை கீக்களுர் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிள்ளியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கிள்ளிய மாணவனை வகுப்பு ஆசிரியர் கண்டித்தாராம். அதன்பிறகு பள்ளி முடிந்து வந்த சில மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டார்களாம். மாணவர்கள் நின்று கொண்டிருப்பதை அந்த வழியாக வந்த கட்சி நிர்வாகி ஒருவர் பார்த்து அவர்களை செவரப்பூண்டிக்கு அனுப்பி வைத்தாராம்.

வீடு திரும்பிய மாணவர்கள் இது பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருவண்ணாமலைக்கு செல்லும் டவுன் பஸ்சை சிறைபிடித்தனர்.

தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் சொன்னதை ஏற்று இரவு 8-30 மணி அளவில் கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அதன் பிறகே பஸ் புறப்பட்டு சென்றது.

மேலும் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!