திருவண்ணாமலை பஜாரில் இன்று மாலை இளைஞர்களிடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அவர் உயிர் ஊசலாடி வருகிறது. இது சம்மந்தமாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை தேரடி தெரு, திருவண்ணாமலை நகரத்தின் முக்கிய வீதியாக விளங்கி வருகிறது. இங்கு நகைக்கடைகள், துணிக்கடைகள், உணவகங்கள் போன்ற முக்கிய நிறுவனங்கள் இருப்பதால் எப்போதும் கூட்டம் மிகுந்து காணப்படும். மேலும் அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லக் கூடிய ராஜகோபுரம் இங்குதான் உள்ளது. ஆடி வெள்ளியான இன்று காலை முதல் திருவண்ணாமலையில் கோயிலுக்கும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் தேரடித் தெருவில் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 6-30 அளவில் பூம்புகார் ஷாப்பிங் சென்டர் எதிரில் 3 இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தகராறு முற்றி அதில் ஒருவருக்கு கழுத்து மற்றும் முகத்தில் கத்திக் குத்து விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் கீழே சாய்ந்தார்.
ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தினால் தேரடித் தெருவில் பரபரப்பு ஏற்பட்டது. கத்தி குத்து பட்டவர் பேகோபுரத் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார்(வயது 28) என்பதும், பூ மார்க்கெட்டில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், பிரேம்குமாரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தில் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனு(38), கடலாடியைச் சேர்ந்த வெங்கடேசன்(35) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பழுதடைந்த காரணத்தால் இந்த சம்பவங்கள் பதிவாகவில்லை என கூறப்படுகிது. முக்கியமான இடத்தில் போலீசார் வைத்துள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.