Homeசெய்திகள்ஊராட்சிக்கு பணம் தராதது எங்கள் தவறல்ல-கலெக்டர்

ஊராட்சிக்கு பணம் தராதது எங்கள் தவறல்ல-கலெக்டர்

திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பினால் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய முடியும், ஊராட்சிகளுக்கு நான் நினைத்தாலோ, அரசு நினைத்தாலோ நிதி தர முடியாது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் தலையாம்பள்ளம் ஊராட்சியில் 76-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சிக்கு பணம் தராதது எங்கள் தவறல்ல-கலெக்டர்

இதில் கலெக்டர் பா.முருகேஷ் பேசியதாவது,

திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

கிராமத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப வருடத்திற்கு ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அது எந்த விதத்தில் செயல்படுகிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெரிந்து பயனடைய முடியும்,

ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம், பள்ளிகளில் செயல்படும் விதம் மற்றும் கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து பொது மக்கள் கிராம சபையில் விவாதிக்க வேண்டும்.

அரசால் கொடுக்க முடியாது

இந்த கிராமத்துக்கு தேவையான வளர்ச்சி குறித்து திட்டங்கள் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஊராட்சித் தலைவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும், கலெக்டர் நினைத்தால் இந்த பஞ்சாயத்துக்கு பத்து லட்சம், இந்த பஞ்சாயத்து இருபது லட்சம் என கொடுக்க முடியாது. திடீரென ஒரு தலைவர் வந்து இந்த கிராமத்துக்கு பணிகள் செய்ய வேண்டும், 20 லட்சம் கொடுங்கள் என்றால் அரசால் கொடுக்க முடியாது.

இதற்கென்று ஒரு திட்டம் வடிவமைத்து அது கிராம சபையில் தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். குடிநீர் வசதி, கழிவறை வசதி, ரோடு வசதி, பள்ளி கட்டிடம் போன்ற பணிகளுக்காக திட்டங்களை தயாரிக்கலாம். ஊராட்சி செயலாளர் பொதுமக்களிடம் சென்று நமது ஊராட்சிக்கு இந்த திட்டங்கள் மூன்று வருடங்களில் செய்ய உள்ளோம் என்பதை தெரிவிக்க வேண்டும்

சில ஊராட்சி மன்ற தலைவர்கள் எங்கள் ஊருக்கு பணமே வரவில்லை என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் திட்ட அறிக்கையில் சரியாக கவனம் செலுத்தவில்லை. திட்ட அறிக்கையில் நீங்கள் சரியாக கவனம் செலுத்தாமல் ஏனோதானோ என்று அனுப்பி இருப்பீர்கள். அந்த பஞ்சாயத்து செயலாளர் ஏதாவது ஒன்று எழுதி இருப்பார், நீங்கள் கையெழுத்து போட்டு அனுப்பி இருப்பீர்கள்.

தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால்தான் நிதி

சில ஊராட்சிகளில் பணமே கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். அது கலெக்டர் தவறோ, அரசாங்க தவறோ கிடையாது, ஊராட்சிகளில் செய்ய வேண்டிய வேலைகள், அதற்கு உண்டான தொகை எவ்வளவு என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் அரசு அதை தருகிறது.

ஊராட்சி மன்ற தலைவர் அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பும்போது இந்த கிராமத்திற்கு இது தேவை என்று அனுப்பினால், அதை மூன்று ஆண்டுகளுக்கு வருடத்திற்கு இவ்வளவு என்று பணம் ஒதுக்குவார்கள்.

திடக்கழி மேலாண்மை திட்டத்தின் கீழ் மற்றும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. 2021-22, 2022-23ம் ஆண்டிற்கு ஒன்னேகால் லட்சம், ஒன்றரை லட்சம் என ஒதுக்கி இருக்கிறோம். இது நிறைய இடங்களில் செலவு செய்யாமல் இருக்கிறார்கள். எல்லா பஞ்சாயத்துக்கும் குப்பை வண்டிகள் வருகிறது.

என்ன திட்டங்கள் வேண்டும் என்பதை கேட்டு தான் பெற வேண்டும். மேநீர் தேக்கத் தொட்டி இடிந்து விடும் நிலையில் இருக்கிறது, புதிதாக கட்டித்தாருங்கள் என்றால் கட்டித் தர தயாராக இருக்கிறோம். அதே போல் பள்ளி கட்டிடம் கட்டவும் நிதி ஒதுக்குகிறோம்.

அதே போல் அவசர பணிக்காக ஊராட்சி கணக்கில் பணம் எடுக்க முடியவில்லை, ஆனால் திட்டம் தேவை என்று நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன். ஒரே வாரத்தில் தருவேன். ஆனால் அது மிகவும் தேவையான பணியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, தலையாம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டாள் சீதாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊராட்சிக்கு பணம் தராதது எங்கள் தவறல்ல-கலெக்டர்முன்னதாக திருவண்ணாமலை தேரடி வீதியில் காந்தி சிலைக்கு கலெக்டர் முருகேஷ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.


 https://youtube.com/@AgniMurasu

 திருவண்ணாமலை செய்திகள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!