திருவண்ணாமலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது பேகோபுர வாயில் தரை பகுதியை டேப் வைத்து அளந்து பார்த்தார்.
சாலை முழுவதும் வானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்து இப்படி வாகனங்கள் நின்றால் தீபத்துக்குள் எப்படி ரோடு போட்டு முடிக்க முடியும்? என அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் வாகனங்களை நிறுத்த அனுமதித்து டோக்கன் வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக ரூ.20 கோடியில் பேகோபுரத் தெருவிலிருந்து காந்தி சிலை வரையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1080 மீட்டரில் 650 மீட்டர் அளவிற்கு பணி முடிந்துள்ளது.
இப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை சென்று ஆய்வு செய்தார். சாலை உயரமாக அமைக்கப்படும் போது பேகோபுரத்துக்குள் மழை நீர் புக வாய்ப்புள்ளதா? என டேப் கொண்டு பேகோபுர வாயில் தரைபகுதியை அளந்து பார்த்தார். பிறகு அதிகாரிகளிடம் கோபுர வாசலுக்குள் மழை நீர் புகாமல் இருக்கும் அளவிற்கு சாலையை அமைக்கும்படி உத்தரவிட்டார். மழை நீர் வெளியேறும் வண்ணம் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிறகு பேகோபுர பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலையில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதை பார்த்து டிஎஸ்பியிடம் இவ்வளவு வாகனங்களை நிறுத்தினால் தீபத்திற்குள் வேலை எப்படி முடியும்? என்றார். நகராட்சி கமிஷனரிடம் கேட்டதற்கு இங்கு வாகன நிறுத்திற்கு நகராட்சி சார்பில் டோக்கன்கள் கொடுப்பதில்லை என்றார். ஆனால் நகராட்சி சார்பில் டோக்கன் வழங்கப்பட்டதை அமைச்சரிடம் அங்கிருப்பவர்கள் காட்டினர். இதையடுத்து டோக்கன் வழங்கியவருக்கு நோட்டீஸ் கொடுப்பதாக கமிஷனர் சொன்னதற்கு நோட்டீஸ் கொடுத்து பயனில்லை, நடவடிக்கை எடுங்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பிறகு பேகோபுரம் சுற்றுச் சுவரை ஒட்டி பக்தர்கள் இளைப்பாற நிழற்கூரையும், கருங்கல் இருக்கைகளை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.