திருவண்ணாமலையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி உருவ பொம்மையை எரிக்க முயன்றதை போலீசார் போராடி தடுத்தனர்.
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியோ, கொரோனா போன்று சனாதனத்தையும் ஒழித்து கட்டவேண்டும் என பேசினார். இதற்கு இந்தியா முழுவதும் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக தமிழகத்தில் இந்து அமைப்புகளும், பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் போலீஸ் நிலையத்தில் புகார்களும் கொடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை ரவுண்டானா அருகில் இந்து முன்னணி சார்பில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவர் நாக.செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இரா.அருண்குமார், மாவட்ட செயலாளர்கள் எஸ்.சிவா, கே.சரவணன், ஜி.எஸ்.கௌதம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தரணிகுமார், பாஜக மாவட்டத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன், நகரத் தலைவர் மூவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் உதயநிதிஸ்டாலின் ஆகியோரை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
ஒழிப்போம், ஒழிப்போம், இந்து மதத்தை இழிவுபடுத்தும் ஈனப் பிறவிகளை ஒழிப்போம். தண்டிப்போம், தண்டிப்போம், தேர்தல் மூலம் தண்டிப்போம். மறக்க மாட்டோம், மறக்க மாட்டோம், உதயநிதியை மறக்க மாட்டோம். பதில் உண்டு, பதில் உண்டு, தேர்தல் நேரத்தில் பதில் உண்டு. கோயில் வேண்டாம், இந்து மதம் வேண்டாம், உண்டியல் மட்டும் வேண்டுமா? வாழ்வோம், வாழ்வோம், பண்பாளர்கள் உள்ள இந்துக்களாக வாழ்வோம். தட்டிக் கேட்போம், தட்டிக் கேட்போம், இந்து மதத்தை இழிவு படுத்தும் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்போம் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது உதயநிதியின் உருவப்படங்கள் கிழித்து எறியப்பட்டது. மேலும் மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார், மறைத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தார். இதை போலீசார் தடுக்க முயற்சித்தனர். இந்து முன்னணி நிர்வாகிகள் போலீசாரை மறித்து நின்றனர். இந்து முன்னணியினரோடு போலீசார் மல்லுக்கட்டி உருவபொம்மையை கைப்பற்றி எரிக்காமல் தடுத்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை 2 வேன்களில் ஏற்றி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். சில மணி நேரங்களில் கைதானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.