Homeஅரசியல்பாதி கூட இல்லை -உண்டியல் வருமானம் குறைந்தால் அதிர்ச்சி

பாதி கூட இல்லை -உண்டியல் வருமானம் குறைந்தால் அதிர்ச்சி

பக்தர்களிடம் காணிக்கை பெற அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் முதன்முறையாக இந்த பவுர்ணமியில் ரோட்டில் உண்டியல்களை வைத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியை கூட தாண்டவில்லை. 1 வார கால இடைவெளியில் 2 மாத உண்டியல்கள் எண்ணப்பட்டதே வருமானம் குறைந்தற்கு காரணம் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்று வரை காலக்கெடுவை ரிசர்வ் வங்கி அறிவித்ததால் அண்ணாமலையார் கோயில் உண்டியல்கள் இன்று அவசரம் அவசரமாக திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஐந்து மட்டுமே கிடைத்தன.

புகழ் மிக்க அண்ணாமலையார் கோயிலுக்கு தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதன் காரணமாக உண்டியல் காணிக்கையும் அதிகரித்தது. 2021 செப்டம்பருக்கு பிறகு ரூ.1 கோடியாக இருந்த உண்டியல் காணிக்கை தெலுங்கானா, ஆந்திரா பக்தர்களின் வருகை காரணமாக படிப்படியாக உயர்ந்து ரூ.2 கோடியை தாண்டி வந்தது.

பாதி கூட இல்லை -உண்டியல் வருமானம் குறைந்தால் அதிர்ச்சி

கடந்த ஆடி மாத பவுர்ணமி முடிந்த நிலையில் உண்டியலில் ரூ.2 கோடியே 36 லட்சத்து 82 ஆயிரத்து 980யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 223 கிராம் தங்கம், 1.155 கிலோ கிராம் வெள்ளியும் கிடைத்தது. ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற இன்றுவரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்ததால் (அக்டோபர் 7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது) தமிழ்நாடு முழுவதும் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

அண்ணாமலையார் கோயில் உண்டியல்கள் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி மேற்பார்வையில் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 60 உண்டியல்கள் எண்ணப்பட்டன. இப்பணியில் 350 கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிவனடியார்கள் ஈடுபட்டனர்.

பக்தர்களின் வருகை குறைந்தது

ஆடி மாதம் அதிகரித்த அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை, ஆவணி மாதம் ரூ. 1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ஆக குறைந்தது. அதாவது ரூ.40 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை வெகுவாக குறைந்து ரூ.1 கோடியை கூட தாண்டவில்லை. இம்மாத உண்டியலில் ரூ.98 லட்சத்து 59 ஆயிரத்து 822யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். 135 கிராம் தங்கம், 1.075 கிலோ கிராம் வெள்ளியும் கிடைத்தது.

பாதி கூட இல்லை -உண்டியல் வருமானம் குறைந்தால் அதிர்ச்சி

28ந் தேதி மாலைதான் புரட்டாசி மாத பவுர்ணமி ஆரம்பமானலும் அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலத்திற்கும் சென்றனர். இது இரவு பல லட்சமாக உயர்ந்தது. மறுநாளும் பவுர்ணமி தொடர்ந்ததால் அன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் முதன்முறையாக இந்த மாத பவுர்ணமியில் அண்ணாமலையார் கோயில் எதிரிலும், சர்க்கரை குளம் அருகிலும் நடமாடும் உண்டியலை வைத்து பக்தர்களிடம் காணிக்கையை பெற்றது. வருமானம் குறைந்ததால் ரோட்டில் கோயில் நிர்வாகம் உண்டியலை வைத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொரோனா காலத்தில் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு அண்ணாமலையார் கோயில் மட்டும் திறக்கப்பட்டது. அப்போதே உண்டியல் வருமானம் ரூ.77 லட்சத்தை தாண்டியது. ஆனால் தற்போது ரோட்டில் உண்டியல் வைத்து வசூல் செய்தும் காணிக்கை பணம் ரூ.1 கோடியை கூட தாண்டாதது நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதுமே ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி உண்டியல்கள் அடுத்த மாதம்தான் எண்ணப்படும். ஆனால் ஆவணி மாத உண்டியல்களும், புரட்டாசி மாத உண்டியல்களும் 1 வார இடைவெளிக்குள் எண்ணப்பட்டதுதான் வருமானம் குறைந்தற்கான காரணம் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

கடும் போக்குவரத்து நெரிசல்

திருவண்ணாமலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் கோயிலை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் பக்தர்களின் வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்த தேவையான பார்க்கிங் வசதியை செய்து தர நிர்வாகம் தவறி விட்டது.

மேலும் வாகனங்களை எங்கே நிறுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இல்லாததாலும், ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் அதிக அளவு வருவதால் அவர்களின் மொழியில் வழிகாட்டி பலகைகள் இல்லாததும் பக்தர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதே போல் கிரிவலப் பாதையில் போதிய கழிவறை இல்லாததும் பக்தர்களை அவதிப்பட வைத்தது.

மேலும் சாமியை தரிசனம் செய்ய கோயிலுக்குள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது, சாமியை சரிவர தரிசனம் செய்ய விடாமல் சில பணியாளர்கள் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும் பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் 4 வருடங்களுக்கு முன் இறந்து போன யானைக்கு கோயிலுக்கு அருகில் நெரிசல் மிகுந்த பகுதியில் அரை கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டி வருவதும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் காரணமாகவே வெளி மாநில பக்தர்கள் குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

போட்டோ, வீடியோ – பார்த்திபன்


Link – https://youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!