திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிழக்கு கோபுரமான ராஜகோபுரம் முன்பு ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணிக்கு அமைச்சர் எ.வ.வேலு இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், கிழக்கு இராஜகோபுரம் முன்பு ரூ.5கோடியே 99லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டார். இதைத் தொடர்ந்து இப்பணிக்கு திருக்கோயில் நிதியிலிருந்து ரூ. 6கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கிழக்கு இராஜகோபுரம் முன்பு பாத்திர கடைகள் இருந்த பகுதியில் முதல் தளத்துடன் 95 கடைகளும், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் தரை தளத்தில் 56 கடைகளும் கட்டப்பட உள்ளது. ஒரு வருடத்திற்குள் இந்த கடைகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கடைகளுக்கு கட்டடம் கட்ட இன்று கால்கோல் விழா நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், ஸ்ரீதரன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், கோயில் இணை ஆணையாளர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அருணாசலேசுவரர் திருக்கோயில் சுற்றி தற்காலிக கடைகள் மட்டுமே உள்ளது. அதை நிரந்த கடைகளாக மாற்ற தமிழ்நாடு முதலமைச்சரிடம் நானும், சட்டபேரவை துணைத்தலைவர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் பரிந்துரைத்தோம். முதலமைச்சரிடம் இதற்கான ஆணை பெறப்பட்டு ரூ. 6 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. இதில் 6500 சதுர அடி அளவு உள் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
மேலும் இந்த கட்டடத்தினை பொதுபணித்துறை மூலமாக கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதேபோல் இந்த கட்டிடத்தில் 151 கடைகள் கட்டப்படுகிறன. இந்த கட்டிடத்தில் ஏற்கனவே இங்கு வியாபாரம் செய்தவர்களுக்குதான் முன்னுரிமை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. இதை நமது மாவட்டமான திருவண்ணாமலையிலிருந்து சொன்னால் தான் பெருத்தமாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.