திருவண்ணாமலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகிறார். 22ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதையொட்டி 13 ஆயிரம் வாக்குச் சாவடி முகவர்களுக்கு மட்டன் பிரியாணியுடன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு வரும் ஸ்டாலினுக்கு நாளை மாலை 6 மணிக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் சோ.காட்டுகுளம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் 22ம் தேதி காலை திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடத்தையும், மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவ சிலையையும் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம் மலப்பாம்பாடி கிராமத்தில் அருணாசலம் சர்க்கரை ஆலை இயங்கி வந்த இடத்தில் நடக்கிறது.
இதில் 13 ஆயிரம் வாக்குச் சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர். 22ந் தேதி காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து பல்வேறு தலைப்புகளில் திமுக முக்கிய நிர்வாகிகள் பயிற்சி அளிக்கின்றனர். மாலை 4 மணிக்கு இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.
இதற்காக கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முகவர்களுக்காக 3 சமையல் கூடங்களும், முக்கிய பிரமுகர்களுக்காக ஒரு சமையல் கூடம் என 4 சமையல் கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, எலும்பு ரசம், மீன், முட்டை, இந்த பகுதியில் கிடைக்காத ஒரு ஸ்பெஷல் ஸ்வீட்டுடன் மதிய உணவு அளிக்கப்படுகிறது.
அழைப்பு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே அரங்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல சாலை வளைவாக இருப்பதால் மேடைக்கு நேராக செல்லும் வகையில் நிலத்தின் நடுவே சாலை போடப்பட்டுள்ளது. இதற்காக பயிர் வைக்கப்பட்டிருந்த நிலம் விலைக்கு வாங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்று இரவு திருவண்ணாமலை நகராட்சி பள்ளி எதிரில் உள்ள கலைஞர் திடலில், திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் ஆகியோரது மகள் திருமண வரவேற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
முதல்வர் வருகையை யொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.