மணமகள் அண்ணன் உள்பட 4 பேர் பலி
திருமணத்திற்கு காரில் சென்ற போது விபத்து
டிராக்டரின் பின்புறம் கார் மோதியதில் தங்கையின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த அண்ணன் உள்பட 4 பேர் விபத்தில் பலியானார்கள்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம் கப்ளாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்(வயது 27). திருவண்ணாமலையில் மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார். இவரது தங்கை கலைச்செல்விக்கு இன்று கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கடலாடி குளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இந்த திருமணத்திற்கு செல்வதற்காக பாண்டியன், தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு மாருதி டிசையர் காரில் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2-45 மணிக்கு அந்த கார் சோமாசிபாடி புதூர் அல்அமீன் கல்லூரி அருகில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டிராக்டரின் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியது. இந்த விபத்தில் பாண்டியன், விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூரைச் சேர்ந்த அழகன் (32), வேலூர் கஸ்பாவைச் சேர்ந்த பிரகாஷ் (34) ஆகியோர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த சிரஞ்சீவி (40) மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர். டிராக்டர் டிரைவரான வள்ளிவாகையைச் சேர்ந்த பூங்காவனம் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்தினால் கப்ளாம்பாடி கிராமமே சோகத்தில் மூழ்கியது.
தேவை ஒளி பிரதிபலிப்பான்
விபத்து நடந்தது கிருஷ்ணகிரி-பாண்டி தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த மாதிரியான சாலைகளில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளிலோ, டிராக்டரிலோ செல்பவர்கள் வானங்களின் பின்னால் ஒளி பிரதிபலிப்பான்களை பொருத்தி கொண்டு சென்றால் விபத்திலிருந்து தப்பிக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.