சித்ரா பவுர்ணமி: 185 டன் குப்பைகள் அகற்றம்
துப்புரவு பணியாளர்களுடன் உணவு அருந்தினார் கலெக்டர்
சித்ரா பவுர்ணமியை யொட்டி 185 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ள கலெக்டர், துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
கடந்த 23ந் தேதி சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அன்றும், 24ந் தேதியும் சுமார் 30 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிரமமின்றி கிரிவலம் செல்வதற்கு அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது.
சித்ரா பவுர்ணமி முடிந்த நிலையில் கிரிவலப்பாதை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களும் அதிக அளவில் இருந்தது. இவற்றை துப்புரவு பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் குப்பைகளை அகற்றியதை பார்த்த தன்னார்வலர்கள் அவர்களுக்கு குளிர்பானங்களை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினர்.
ஊரக வளர்ச்சி துறை மூலம் ஊரகப்பகுதி 8 கிலோ மீட்டருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 150 பேர் வீதம் (காலை 75 பணியாளர்களும், மாலை 75 பணியாளர்களும்) 22.04.2024 முதல் 25.04.2024 வரை 8 வட்டாரங்களிலிருந்து 1200 பணியாளர்கள் மூலம் தூய்மைப்பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார். துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு பரிமாறி அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.
பிறகு துப்புரவு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் 300 பேருடன் கலெக்டர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.
கிரிவலப்பாதையில் மட்டும் நான்கு நாட்களில் 185 டன் (1லட்சத்து 85ஆயிரம் கிலோ) மக்கும், மக்காத குப்பைகள் தூய்மைப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டிருந்தது. இதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமால் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கிரிவலப்பாதையில் மட்டும் 185 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், நகராட்சி பகுதிகளில் 145 டன் குப்பை அகற்றப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.