திருவண்ணாமலை கிரிவலப்பாதை அமைக்கப்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளில் வீடுகள் அமைந்து விட்டதாக ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு அமைத்த குழு முன்பு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி எம்.கோவிந்தராஜன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார்.
மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் அவர் பேசும் போது இந்த குழுவில் உறுப்பினர்களாக நில நிர்வாக ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர், ஓய்வு பெற்ற இணை ஆணையர் நடராஜ், வனப்பாதுகாவலர், மாவட்ட கண்காணிப்பாளர் போன்றவர்கள் உள்ளனர்.
இது ஆரம்ப கட்ட ஆலோசனை கூட்டம் என்பதால் உயர்நீதிமன்ற ஆணையை செயல்படுத்துவதற்கு என்ன செய்யலாம்? என ஒவ்வொருவருடைய கருத்தையும் கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார். அவர் பேசுகையில், இந்து சமய அறநிலை துறை, மாவட்ட வனத்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை ஆகிய துறைகளை உள்ளடக்கி பட்டா வழங்கப்பட்ட நிலங்கள், பட்டா வழங்கப்படாத நிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. நில அளவை துறையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குளங்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சில இடங்களில் பட்டா வழங்காத நிலையில் வீடுகள் இருக்கின்ற இடங்களை கண்டறிந்து இருக்கிறோம். பட்டா வழங்கப்பட்டு இருப்பதை கண்டறியும் நடவடிக்கை தொடர்கிறது.
கிரிவலப்பாதை என்று சொல்லும்போது கிரிவலத்துக்கு உட்புறத்தில் மலை இருக்கிறது. கிரிவலப் பாதை அமைக்கப்படுவதற்கு முன்னர் அந்த பகுதியில் பல்வேறு ஆண்டுகளாக வீடுகளும் அமைத்திருக்கிறார்கள். அதில் பட்டாக்களும் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகாலமாக பட்டாக்கள் ஏதும் வழங்கப்படவில்லை என கூறினார்.
பிறகு ஒவ்வொரு துறை சார்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். நீதிபதி எம்.கோவிந்தராஜனிடம், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புதியதாக மனு ஒன்றை வழங்கினார்.