உழவர்களை காக்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க கூடாது என திருவண்ணாமலையில் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கூறினார்.
திருவண்ணாமலை-செங்கம் ரோடு அத்தியந்தல் அருகில் உள்ள மைதானத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு இன்று (21-12-2024) மாலை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பேசினார்கள்.
டாக்டர் ராமதாஸ் பேசியதாவது,
விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்க்கட்சியாக இருக்கும் போது மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். இப்போது தலைகீழாக மாறிவிட்டார். திராவிட மாடல் அரசு விவசாயிகளை படுகுழியில் தள்ளிவிட்டது. உழவர்களை காக்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்க கூடாது. இந்த அரசை தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.
2025-ஆம் ஆண்டு சென்னையில் போர் சின்னம் இருக்கும் இடத்தில் இதை விட 10 மடங்கு விவசாயிகள் கூடி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த போகிறார்கள். போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை,
தமிழ்நாடு உழவர்களின் பிரச்சனைகள் குறித்து ஆராயவும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பரிந்துரைக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், அனைத்து வேளாண் விலை பொருட்களுக்கும் கொள்முதல் விலை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், உழவர்களுக்கு இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும், மத்திய அரசின் உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ.12,000-மாக உயர்த்த வேண்டும்,
நீர் நிலைகளை தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்க தனி வாரியம் அமைக்க வேண்டும், உழவர்களின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வட்டி மானியம் வழங்க வேண்டும், நெல்லுக்கு ரூ.3500 கரும்புக்கு ரூ.5000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும், காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் கொள்முதல் விலை வேண்டும்,
வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும், வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டும் வகையில் வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டும், பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தனி கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க கூடாது, நந்தன் கால்வாய் திட்டம் மற்றும் தென்பெண்ணை- துரிஞ்சலாறு இணைப்பை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டும், இனி வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் பாமக மாநில கவுரவ தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாநில செயலாளர் வேலுச்சாமி, பாமக மாநில பொருளாளர் திலகபாமா, பாமக மாவட்ட செயலாளர்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம் இல.பாண்டியன் அ.கணேஷ்குமார் ஆ.வேலாயுதம் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.