திருவண்ணாமலை நகர நில ஆவணங்களை நவீனமயமாக்க ட்ரோன் மூலம் சர்வே எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா (National geospatial Knowledge based land Survey of Urban Habitations – NAKSHA) திட்டத்தில் திருவண்ணாமலை மாநகராட்சியில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுர்தியை (ட்ரோன்) பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புலவரைபடங்களை உருவாக்கி, அவற்றை உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் சொத்துவரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டம் திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்றைய தினத்திலிருந்து செயல்படுத்தப்படவுள்ளது.
மாநகரத்தில் ஆளில்லா வானூர்தியை (ட்ரோன்) பயன்படுத்தி நிலஅளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image – ORI) உருவாக்கப்படும். அதன் தொடர்ச்சியாக அவ்வொளிப்படத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட புலங்களில் வருவாய் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துறைகளின் பணியாளர்கள் அடங்கிய குழுக்களால் நிலஅளவை மேற்கொள்ளப்படும்.
நவீன நிலஅளவை கருவிகளைக் கொண்டு (DGPS,ETS) நிலஅளவை செய்து புலவரைபடம் தயார் செய்யப்படும். நிலஅளவை மேற்கொண்டு தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம், அவை விதிகளிப்படி பரிசீலித்து தீர்வு காணப்படும்.
இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நிலஆவணங்கள் வெளியிடப்படும். மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைத்த பின்னர் புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை தாமரை நகர் வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப், கலெக்டர் க.தர்ப்பகராஜ் ஆகியோர் இத்திட்டத்தினை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
‘நக்சா’ திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு மாநகராட்சிக்குட்பட்ட நில உடமைதார்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், கோட்டாட்சியர் செந்தில்குமார் (பொ), உதவி இயக்குநர், நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் உதவி இயக்குநர் சண்முகம் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.