திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் அங்கன்வாடி பணியாளர்,குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது சம்மபந்தமாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர், 54 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 254 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
மாவட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுலவகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும்.
விண்ணப்பங்களை http://www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 23.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொகுப்பூதிய விவரம் :
தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து 12 மாத காலம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின்கீழ் ஊதியம் பெறுவர்.
தொகுப்பூதியத்தில் மாதமொன்றுக்கு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.7,700/- குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5,700/- அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4,100/- ஒன்பது மாத காலத்திற்கு பின் வழங்கப்படும்.
சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.7,700-24,200/- என்ற விகிதத்திலும், குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.5,700-18,000/- என்ற விகிதத்திலும், அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.4,100-12,500/- என்ற விகிதத்திலும் வழங்கப்படும்.
தகுதிகள்
இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியாக அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது நிர்ணயம் அறிவிப்பு வந்த நாளின் படி கணக்கிடப்பட வேண்டும். அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 25 முதல் 35 வயது வரை, விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்சி/எஸ்டி வகுப்பினர் : வயது 25 முதல் 40 வரை, மாற்றுத் திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரை(35.3=38), அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 20 வயது முதல் 40 வரை, விதவைகள்/ஆதரவற்ற பெண்கள்/எஸ்சி/எஸ்டி வகுப்பினர் : 20 வயது முதல் 45 வரை, மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 43 வயது வரை (40.3=43) இருக்க வேண்டும்.
தூர சுற்றளவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையத்திற்கும் நியமனம் கோரும் விண்ணப்பதாரர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர், அதே கிராம ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர், அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள மையங்களில் நியமனம் கோரும் விண்ணப்பதாரரின் அதே வார்டு (அ) அருகிலுள்ள வார்டு (அ) மைய அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம் (Block /Project) குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் ( தாய் /தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும்.
நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.