திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம்.
மாதிரி விண்ணப்ப படிவங்கள், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாரங்கள் மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி , ஆரணி, திருவத்திபுரம் நகராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட இணையதள முகவரி
https://tiruvannamalai.nic.in/-ல் செய்தி, விண்ணப்பம் மாதிரி, இனசுழற்சி வாரியாக காலியிடம் உள்ள பள்ளி சத்துணவு மையங்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பூதிய விவரம் :
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுபவர் தொடர்ந்து ஓராண்டு காலம் பணியினை முடித்தபின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின்கீழ் ஊதியம் பெறுவர். தொகுப்பூதியம் மாதம் வீதம் ரூ.3000/-, ஓராண்டு காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.3000 – 9000/- என்ற விகிதம் ஆகும்.
தகுதிகள்:
இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தோல்வி/தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக அனைவரும் கட்டாயமாக எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். வயது நிர்ணயம் அறிவிப்பு வந்த நாளின் படி கணக்கிடப்பட வேண்டும்.
அதன்படி பழங்குடியினர் (ST) : 18 முதல் 40 வயது வரை, விதவைகள் /கணவனால் கைவிடப்பட்டவர் : 20 முதல் 40 வயது வரை, பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 21 முதல் 40 வயது வரை. தூர சுற்றளவு நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. இருக்க வேண்டும். (ஊராட்சி, குக்கிராமம், வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை)
மாற்றுத் திறனாளிக்கான இடஒதுக்கீடு விவரம் (4%) (உரிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும்). குறைவான பார்வை திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் பார்வை சரிசெய்யப்பட்டது), உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழு நோய் (40 சதவீதம் கைகளின் முழு செயல்பாட்டு திறன் உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது), திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான). விதவை கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள்: பள்ளி மாற்றுச் சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், விதவை கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள், அதற்கான சான்றிதழ் போன்றவற்றின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
அஞ்சல்துறையின் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முக தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். வேறு அலுவலகங்களிலோ, மற்ற அலுவலர்களிடமோ அளிக்கபப்டும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையினை இரத்து செய்வதற்கும் திரும்ப பெறுவதற்கும் திருத்துவதற்கும் கெடு தேதியினை நீட்டிப்பதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு உரிமை உண்டு.
இவ்வாறு கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.