திருவண்ணாமலையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசாரும்¸ மாணவர்களும் இனிப்பு வழங்கினர்.
சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்துக்களினால் ஏற்படும் மரணம் 27 சதவீதம் குறைந்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கவும்¸ சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்கவும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று (21.03.2022) திருவண்ணாமலை ராதா லாட்ஜ் சந்திப்பு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன் குமார் தலைமையில் திருவண்ணாமலை நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரன் ஸ்ருதி மற்றும் போலீசாருடன் இணைந்து தியாகி அண்ணாமலை அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தலை கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் முகம் பார்க்கும் கண்ணாடியை காட்டியும்¸ முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
அப்போது அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடியும் முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இனிப்பு கிடைத்ததை பார்த்து ஹெல்மட் அணிந்து வந்தவர்கள் ஆச்சரியடைந்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கியவர்கள் மீது 2 லட்சத்து 8 ஆயிரத்து 285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல்¸ செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குதல்¸ அதிவேகமாக வாகனத்தை இயக்குதல்¸ அதிக பாரம் ஏற்றுதல்¸ சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல்¸ சிக்னலை மீறுதல் போன்ற ஓட்டுநர் உரிமத்தை தற்காலிக ரத்து செய்யும் விதிமீறல்கள் மீது 50ஆயிரத்து 486 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 20.03.2021-ந் தேதி வரை தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கியவர்கள் மீது 55ஆயிரத்து 865 வழக்குகளும்¸ போக்குவரத்து விதிமீறல்கள் மீது 18 ஆயிரத்து 872 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 125 விபத்து மரண வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 133 நபர்கள் மரணமடைந்துள்ளனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகமாக செய்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது அதிகப்படுத்தியதால் சாலை விபத்துக்களினால் மரணம் அடைவது நடப்பாண்டில் 27.2 சதவீதம் குறைந்து இதுவரை 91 விபத்து மரண வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 95 நபர்கள் மரணமடைந்து உள்ளனர். இது மட்டுமன்றி கடந்த ஆண்டில் 20.03.2021-ந் தேதி வரை 263 விபத்து காய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 370 நபர்கள் காயமடைந்திருந்த நிலையில் நடப்பாண்டில் இது 6 சதவீதம் குறைந்து 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 311 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தெரிவித்துள்ளார்.