திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷன் இன்றி அகற்றினர்.
ஜே.சி.பி ஆபரேட்டர்
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வட்டம் குபேரபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் போஜன். சென்னையில் ஜே.சி.பி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்¸ 1மகன் உள்ளனர். கடைசி மகள் மூன்றை வயது தனுசுயா.
நேற்று பகல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனுசுயா கீழே கிடந்த 5 ரூபாய் நாணயத்தை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வலியில் தனுசுயா அலறினாள். அவளது அழுகையை பார்த்து ஓடி வந்த அவரது தாயார் விவரத்தை தெரிந்து கொண்டு தலைகீழாக குழந்தையை தூக்கி பிடித்து காசை வெளியேற்ற முயற்சித்தார். இந்த முயற்சி பலனிக்காததால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனுசுயா சேர்க்கப்பட்டாள்.
டாக்டர்கள் குழு
அங்கு பணியில் இருந்த காது¸ மூக்கு¸ தொண்டை சிறப்பு நிபுணர் பொ.சிந்துமதி மற்றும் டாக்டர் எம்.ஆர்.கே ராஜசெல்வம் ஆகியோர் உடனடியாக சிகிச்சையை மேற்கொண்டனர். எக்ஸ்ரேவில் குழந்தையின் தொண்டையில் 5 ரூபாய் நாணயம் வசமாக சிக்கி கொண்டிருப்பது தெரிந்தது. இதை எப்படி குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடமால் அகற்றுவது என்று டாக்டர்கள் குழு ஆலோசித்தது.
கண்ணீர் மல்க நன்றி
இதையடுத்து மருத்துவ அதிகாரி அரவிந்தன் ஆலோசனையின் பேரில் மயக்க மருந்தியல் மருத்துவர் திவாகர் வரவழைக்ப்பட்டு அவர் மூலம் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. பிறகு ஸ்கோப் முறையில் உணவு குழாயில் டியூப் செலுத்தி நாணயத்தை வெளியே எடுக்கும் முயற்சியை செய்தனர். பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சையில்லாமல் வெற்றிகரமாக நாணயம் வெளியே எடுக்கப்பட்டது. கொரோனா காலத்திலும் சிரமம் எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் பொ.சிந்துமதி¸ எம்.ஆர்.கே ராஜசெல்வம்¸திவாகர் மற்றும் நர்ஸ் அனு¸ மயக்க மருந்து தொழில் நுட்ப நிபுணர் ஜமுனா¸ ஊழியர்கள் சந்துரு¸ குமரன் ஆகியோருக்கு தனுசுயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவை
இது குறித்து டாக்டர் ராஜசெல்வம் கூறுகையில் குழந்தைகள் எது கிடைத்தாலும் வாயில் போட்டுக் கொள்வார்கள். எனவே பெற்றோர்கள்தான் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். முக்கியமாக நாணயங்களை எடுத்து விளையாடமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடும். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காகவே கொரோனா காலத்திலும் சிகிச்சையை மேற்கொண்டோம் என்றார்.
இதே போல் சென்ற வருடம் அக்டோபர் மாதம் தண்டராம்பட்டு வட்டம் கொழுந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 1 வயது குழந்தை விழங்கிய 5ரூபாய் நாணயம் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.