Homeசெய்திகள்விஏஓ போராட்டம்-திமுக நிர்வாகி மீது எப்.ஐ.ஆர்.

விஏஓ போராட்டம்-திமுக நிர்வாகி மீது எப்.ஐ.ஆர்.

அடங்கல் சான்றுகேட்டு அலுவலக நாற்காலிகளை தூக்கி வீசிய திமுக நிர்வாகி மீது விஏஓகள் போராட்டம் நடத்தியதன் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வட்டம் அகரம்பள்ளிப்பட்டில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் கோ.வெங்கடாசலம்.

நேற்று காலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அதே ஊரைச் சேர்ந்த பாபு(30) என்பவர் சென்று அங்கு இருந்த உதவியாளர் வெங்கடேசனிடம், வேறு நபரின் பெயரில் உள்ள நிலத்தை தான் சாகுபடி செய்து வருவதாக கூறி தனது பெயரில் அடங்கல் வழங்க கேட்டாராம்.

தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பாபு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்த நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு தாசில்தார் அலுவலகம் அருகே கணினி சான்றுகள் சரிபார்த்துக் கொண்டிருந்த வி.ஏ.ஓ. வெங்கடாசலத்திடம் அடங்கல் வழங்க கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை பிடித்து தள்ளியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வி.ஏ.ஓ. வெங்கடாசலம், பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தகராறில் ஈடுபட்ட பாபு, திமுகவில் கிளை செயலாளர் பதவியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக புகாரை வாங்கிய போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கினர்.

See also  மணமகள் அண்ணன் உள்பட 4 பேர் பலி
VAO protest-FIR against DMK executive

இதையடுத்து தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் அலுவலர்களும் கலந்து கொண்டனர். அதன் பிறகே போலீசார் பாபு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

அந்த புகாரில் அவர், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததற்காகவும், அரசு அலுவலத்தில் அத்துமீறி அராஜக போக்கில் நடந்து கொண்ட காரணத்திற்காகவும் பாபு மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக பாபு, தனக்கு சொந்தமற்ற நிலத்திற்கு அடங்கல் வழங்கியே தீர வேண்டும் என முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி செய்ய இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் போலீசார், 294(b) (தொல்லை தரும் வகையில் ஆபாசமாக நடத்தல்), 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்), 353 (கடமையாற்ற விடாமல் தடுப்பது) போன்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!