திருவண்ணாமலையில் மின்வாரிய செயற்பொறியாளர் வீட்டில் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. துணியில் வைத்திருந்த 50 பவுன் நகை தப்பியது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிபவர் ராஜசேகர்(வயது58). திருவண்ணாமலை தாமரை நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். மனைவி பெயர் கீதா. இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் கீர்த்தனா¸ குடியாத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொறியாளராக உள்ளார்.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் அடுத்த மாதம் 11ந் தேதி நடக்கிறது. திருமணத்திற்கு தேவையான பொருட்களையும்¸ நகைகளையும் வாங்கி வீட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு தேவையான துணிகளை வாங்குவதற்காக ராஜசேகர்¸ தனது குடும்பத்தாருடன் சென்னைக்கு சென்றார். அங்கு தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள ராஜசேகரின் வீட்டின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே நுழைந்தனர். பிறகு அங்கிருந்த பீரோவையும் உடைத்து லாக்கரில் பாக்ஸ்களில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டனர். மேலும் நகைளை தேடி பார்த்துள்ளனர். பீரோவில் இருந்த பையை திறந்து பார்த்ததில் துணிகள் நிறைந்திருந்ததால் அதை கட்டில் மீது வீசி விட்டு சென்று விட்டனர். அந்த பையில்தான் ராஜசேகரின் குடும்பத்தினர் 50 பவுன் நகைகளை வைத்திருந்தனர். துணிக்கு அடியில் மறைத்து வைத்திருந்த காரணத்தால் 50 பவுன் நகை கொள்ளையர்களின் கையில் சிக்காமல் தப்பியது.
50 பவுன் நகை இருந்த பை |
இன்று காலை வழக்கம் போல் வாசல் தெளிக்கும் பெண் வந்து பார்த்த போது வீட்டின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ராஜசேகரின் உறவினருக்கு தகவல் தெரிவித்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததும்¸ பணம் – நகை கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி¸ சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள்¸ கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் செல்பவர்கள்¸ தங்கள் முகவரியை அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும்¸ அப்படி பதிவு செய்யப்படும் வீடு இரவு ரோந்து பணியின் போது தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் எனவும் போலீசார் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த அறிவிப்பை பின்பற்றாத காரணத்தால் இது மாதிரியான திருட்டுக்கள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர். இனிமேலாவது வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் செல்பவர்கள் தங்களது விவரங்களை காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.