போதையில் மனைவி, குழந்தைகள் என 5 பேரை வெட்டிச் சாய்த்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு,
திருவண்ணாமலை அடுத்த காஞ்சி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ளது ஒரவந்தவாடி. இங்கு மோட்டூர் பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி விவசாயம் செய்து வந்தவர் பழனி (40).
இவரது மனைவி வள்ளி (35). மகள்கள் சௌந்தர்யா (19) திரிஷா (15) மோனிஷா (14) பூமிகா (9) தனியாஸ்ரீ (4). மகன் சிவசக்தி (6). முத்த மகள் சௌந்தர்யாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
விவசாயி பழனிக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் இருந்துவந்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பழனிக்கு கடன் பிரச்சனையும் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் நேற்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த பழனி குடும்பத்துடன் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜானகி மகளை பார்க்க வந்த போது பழனி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அலறினார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஒரே அறையில் வள்ளி, திரிஷா, மோனிஷா, தனியாஸ்ரீ, சிவசக்தி ஆகிய 5 பேரும் கழுத்து மற்றும் தலையில் கொடுவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.
பூமிகா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் அவர் ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதையில் விவசாயி, ஏதும் அறியாத பிஞ்சு குழந்தைகள் உள்பட தனது குடும்பத்தினர் 5 பேரை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.