நன்னடத்தை சான்றிதழ் கிடைக்காது என புத்தாண்டு அன்று விதிமீறலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு திருவண்ணாமலை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ச. ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது,
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 31.12.2022-ம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள். இரயில் நிலையங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதலாக ஆண் மற்றும் பெண் காவலர்கள் சீருடையிலும் மற்றும் சாதாரண உடையிலும் நியமிக்கப்படுவார்கள்.
இப்பணிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1200 காவல் ஆளினர்கள்(காவலர்கள்)ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடிக்க்கூடாது மற்றும் ஒலிபெருக்கிகள் வைக்கக்கூடாது. மேலும் நள்ளிரவு 1மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட யாருக்கும் அனுமதி கிடையாது.
இதனை மீறுவோர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதனை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் மொத்தம் 62 இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 55 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
கேளிக்கை விடுதிகளில் இரவு நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சட்டத்துக்குட்பட்டு விதிமீறல்கள் இன்றி நடத்தப்படவேண்டும்.
மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடி, காவல் சோதனைச் சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிறமுக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அதிவேகமாகவும், Bike Race-ல் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, மோட்டார் வாகனசட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற அத்துமீறல்களை தவிர்க்க மாவட்டத்தில் மொத்தம் 65 இடங்களில் தடுப்புகள் (Barricade) அமைத்து வாகனசோதனை மேற்கொள்ளப்படும்.
மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, இதுபோன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் வாகன எண்கள் அடையாளம் காணப்படும். அவ்வாறு அத்துமீறி பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்களுக்கு வெளிநாட்டிற்கு செல்ல Passport மற்றும் வேலைவாய்ப்புக்கு காவல்துறை மூலமாக நன்னடத்தைச் சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய இயலாது.
மேற்படி காவல் துறையினரின் அறிவுரைகளை கடைபிடித்தும் அசம்பாவிதம் இல்லாத மற்றும் விபத்தில்லாத புத்தாண்டை கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காவல் துறை சார்பாக இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.