அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் காலை முதல் இரவு வரை 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை காணொலிக்காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பேசியதாவது:-
2022-2023ம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது 4.5.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் அறிவிப்பினை வெளியிட்டார்.
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது ஐந்து கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். அன்னதானம் வழங்கும் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் செலவில் 3000 பக்தர்கள் பயனடைவார்கள், இத்திட்டத்தினை தொடங்கி வைத்ததற்காக தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, அருணாசலேசுவரர் கோயில் இணை ஆணையர் அசோக்குமார், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி, முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கே.வி.சேகரன், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், நகரமன்ற துணை தலைவர் ராஜாங்கம், திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தில் தினமும் தலை வாழை இலையோடு சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்படும். வாரத்தின் 7 நாட்களும் தினமும் விதவிதமான சாம்பார், கூட்டு, பொரியல் இடம் பெறும்.
திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் கடந்த 2002ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் கடந்த 2012ம் ஆண்டு அவர் நடைமுறைப்படுத்தினார்.
ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதான திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பகல் 12 மணி அளவில் தினமும் 300 பேர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை 3 ஆயிரம் பேருக்கு விரிவுபடுத்தியிருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.