கொடுகொட்டி நடனமாடி அம்மனோடு இணைந்தார் அண்ணாமலையார். பாண்டேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையாருக்கு மண்டகபடி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவூடல் விழா
ஊடல் என்பது தலைவன் தலைவியரிடையே நிகழக் கூடியதே’ என்பதும், அவ்வூடலும் இன்பம் தரத் தக்கதே என்பதும் முறையாக மணம் புரிந்து முறையாக மக்கள் இனம் வாழவேண்டி இறைவன் இறைவியர்க்குத் திருமணம் நிகழ்த்துவது போன்று, குறிப்பிட்ட பண்பாடு கெடாமல் ஊடல் நிகழ்ச்சியையும் நடத்தப்படுகிறது.
தலைவன், தலைவியர் இடையே ஊடல் ஏற்படுமாயின், தோழர்கள், தோழிகள் ஊடலை தீர்ப்பர். இறைவனுக்கும் இறைவிக்கும் ஊடல் ஏற்பட்டால், சமய குரவர்களில் ஒருவரான சுந்தரரே தீர்த்து வைத்தல் மரபாக இருந்து வருகிறது.
விசுவரூப தரிசனம்
அதை பின்பற்றியே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருவூடல் விழா நடத்தப்பட்டு வருகிறது. திருவூடலுக்காக கோயிலிருந்து புறப்பட்ட அண்ணாமலையார் கொடிமரம் அருகே நந்தியம் பெருமானுக்கு முன்னே அண்ட சராசரங்களை தன்னுள் கொண்ட விசுவரூப தரிசனத்தை காட்டினார்.
பிறகு சம்பந்த விநாயகரும், கிளி கோபுரத்திருவாயிலில் பதினொருவுருத்திரர்களுக்கும், வல்லாளர் வீற்றிருக்கும் இடபதேவர்க்கும், கம்பத்திளையனார்க்கும் காட்சி தந்தார். திட்டை வாயில் மண்டபத்தின் வழியே சூரியன் தோன்றும் நேரத்தில் ஆதிமூர்த்திகளுக்கு காட்சியளித்து விட்டு பதினாறுகால் மண்டபத்தில் எழுந்தருளினார்.
முத்தொழிலையும் செய்பவர் தாமே என்பதனை ஆன்மாக்களுக்கு உணர்த்த மாடவீதியை மூன்று முறை வலம் அண்ணாமலையார் வலம் வந்தார். முதல் வலத்தில் பிரம வடிவத்துடனும், இரண்டாம் வலத்தில் திருமால் வடிவத்துடனும் வலம் வந்தார். மூன்றாம் வலத்தில் விசுவருப உருத்திரக் காட்சியுடன் திருவூடல் வீதி, ஓயா மடம் எதிரில் திருவூடல் நடைபெற்றது. அப்போது அண்ணாமலையாரின் திருச்சடையினுள் உறைந்திருந்த கங்கையை கண்டு அம்பாள் ஊடல் கொண்டு தனியே திருமஞ்சன கோபுர வழியே கோயிலுக்கு சென்று விட்டார்.
பிருங்கி மகரிஷிக்கு காட்சி
இதையடுத்து தனது மகன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள குமரக்கோயிலுக்கு சென்று இரவு தங்கிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு இன்று காலையில் கிரிவலம் சென்று பழனி ஆண்டவர் கோயிலில் உள்ள பிருங்கி மகரிஷிக்கு அண்ணாமலையார் காட்சியளித்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவலப்பாதை அக்னிலிங்கம் பின்புறம் உள்ள பாண்டேஸ்வராக வீற்றிருக்கும் சிவபெருமான் கோயில் ரமணாசிரமத்தின் உதவியோடு ரூ.1 கோடியில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருவூடல் முடிந்து கிரிவலம் செல்லும் அண்ணாமலையாருக்கு இக்கோயிலில் மண்டகபடி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. காலப்போக்கில் இக்கோயிலுக்கு செல்லும் பாதை குறுகி புதர் மண்டியதால் மண்டகபடிக்கு அண்ணாமலையாரை அழைத்து வருவது நிறுத்தப்பட்டது.
பாண்டேஸ்வரர் கோயில் சார்பில் மண்டகபடி
இந்நிலையில் கோயிலுக்கு செல்ல அகலமான சிமெண்ட் சாலை, படிகள், பாதுகாப்பு வேலிகள் என அமைக்கப்பட்டு பாண்டேஸ்வரர் கோயில் புது பொலிவுடன் காட்சியளித்து வருகிறது. வழிகள் சீரானதால் மீண்டும் அண்ணாமலையாருக்கு மண்டகபடி நடத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதே போல் அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்களும் கோரிக்கை வைத்தனர். இது சம்மந்தமாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று நடைபெற்ற கிரிவலத்தில் அண்ணாமலையார் பாண்டேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரப்படாததால் அந்த கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவலப்பாதையிலே மண்டகப்படி நடத்தப்பட்டது.
மறுஊடல்
உயிரினங்கள் அழிந்து போகாமல் இருக்கவே எம்பெருமான், கங்கையை சடையில் தரித்தார், தருக்காவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கவே பிட்சாடணக் கோலம் பூண்டார், எவர் எவ்வுருவில் வணங்கினாலும், அவ்வுருவில் அவர்களுக்கு அருள்புரிவது என்பது இயல்பு, இதனாலே பிருங்கி முனிவருக்கு காட்சியளித்தார், சிவத்திலிருந்து சக்தியையும். அதே போல் சக்தியிலிருந்து சிவத்தையும் பிரிக்க முடியாது என சுந்தரர் தூது சென்று விளக்கம் அளிக்க அம்மாள் ஊடல் தணிய பெற்றார். அப்போது அம்மாள், இறைவனிடத்தில் கொடுகொட்டி நடனம்( சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, மகிழ்ச்சியில் கைகொட்டி நின்று ஆடிய ஆடல்) ஆடும்படி கேட்க அவரது ஆசையை எம்பெருமான் நிறைவேற்றுகிறார் என்பது வரலாறு.
1 மணி நேரம் நடனமாடிய அண்ணாமலையார்- வீடியோவை காண…
https://www.facebook.com/100010512168519/videos/719428316203744/
இதை விளக்கிடும் வண்ணம் அண்ணாமலையார் கோயிலில் 2ம் பிரகாரத்தில் அமர்ந்திருந்த அம்பாளிடம், சுந்தரர் தூது செல்லும் நிகழ்வு நடைபெற்றது. பிறகு அண்ணாமலையார் முன்னும், பின்னும், சாய்வாகவும் சுமார் 1 மணி நேரமாக நடனம் ஆடினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பரவசமடைந்து ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசித்தனர்.
அம்பாளோடு, அண்ணாமலையார் இணைந்ததையடுத்து இருவருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கிண்ணி பிச்சை
இரவு பொருள் வேண்டி கிண்ணி பிச்சைக்காக சந்திரசேகரர் கீழ்நாத்தூர் மண்டபம் செல்லும் வீதி உலா நடைபெற்றது.