தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலையை கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதும் முதன்முறையாக இன்று திருவண்ணாமலைக்கு வந்தார். காலையில் ரமணாசிரமம் சென்று தரிசனம் செய்தார். பிறகு 9 மணியளவில் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். விநாயகர் சன்னதி¸ அண்ணாமலையார் சன்னதி¸ அம்மன் சன்னதி¸ பைரவர் சன்னதி ஆகிய இடங்களுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
கோயில் வளாகத்தில் அவருடன் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அண்ணாமலை கூறியதாவது¸
கிரிவலத்திற்கு அரசு தடை விதித்து இருப்பதால் கிரிவலம் செல்ல முடியவில்லை.அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன்.பாரதிய ஜனதா கட்சி தமிழ் மண்ணில் ஆன்மீகத்தை வைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாட்களில் 10 லட்சத்திலிருந்து 12 லட்சம் பக்தர்கள் வரை வருகை தருகின்றனர்¸ கார்த்திகை தீபத்தன்று 30 லிருந்து 35 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். யாருமே அழைக்காமல் அவர்கள் வருகின்றனர். அடிப்படையில் பக்தர்களுக்கு ஆன்மீக தேடுதல் உள்ளது. ஆன்மீகத்தில் வாழ்க்கைப் பயணத்தை கொண்டு போக வேண்டும் என்பதற்காக கோயிலை புண்ணிய ஸ்தலமாக பார்த்து வருகின்றனர்.
திருவண்ணாமலை கோயிலுக்கு யானை வாங்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக குரல் கொடுக்கும். இதற்காக போராட்டமும் நடத்துவோம். கிரிவலத்தில் பக்தர்கள் நெருக்கமாக சுற்றி வருவார்கள். இப்போதும் கூட சிலர் கிரிவலம் வருவதை காண முடிகிறது. அரசு ஒரு விதியை கொண்டு வந்திருக்கிற போது அதை பின்பற்ற வேண்டும் என்பது முக்கியமாகும். விரைவில் கிரிவலத்திற்கான தடையை அரசு நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இருக்க கூடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உலகத்திலேயே மிகப்பெரிய சேவை அமைப்பு. அந்த அமைப்பிற்கு ஈடு எதுவுமே கிடையாது. மோகன் பகவத்¸ உச்சகட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கக் கூடியவர். இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் வரும் போது அவரது பாதுகாப்பிற்கான மீட்டிங் நடக்கும். இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்பார்கள். சாலையில் இருக்கும் வேகத்தடைகளை எடுப்பார்கள்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில பணிகள் செய்யப்பட்டதாக மதுரை உதவி ஆணையர் தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கிறார். இருப்பினும் மதுரை மாநகராட்சி உதவி ஆணையரை பணியிலிருந்து விடுவித்து இருப்பதை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல்¸ இதுகுறித்து தலைமைச் செயலாளருக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறோம். எந்த தவறையும் செய்யாத உதவி ஆணையரை மீண்டும் பணியமர்த்த வேண்டும். கொரோனா கால கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செய்யாத வேலையே இல்லை. அப்படிப்பட்ட அமைப்பின் மீது தமிழக அரசுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையாகும்.
தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசை கண்டிப்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஜூன் மாதத்தில் 41லட்சம் தடுப்பூசிக்கு பதிலாக 52லட்சம் தடுப்பூசியை மத்திய அரசு தந்துள்ளது. இந்த மாதமும் அறிவித்த 70 லட்சத்தை தாண்டித்தான் தடுப்பூசி தரப்படும். ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் திமுகவினர் டோக்கனை வாங்கி அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு தந்து வருகின்றனர். இதை கண்டித்துதான் அதிமுக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். பா.ஜ.கவும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறது. மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிகமாகவே மாநில அரசுக்கு கொரோனா தடுப்பூசியினை வழங்கி வருகிறது. மத்திய அரசு குறைவாக தடுப்பூசி வழங்கி இருந்தால் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை கொடுக்கட்டுமே. இவர்கள் டெல்லி செல்லும் போதெல்லாம் மத்திய அரசு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு அளித்து நிறைய தடுப்பூசியினை வழங்குகிறார்கள் என்று சொல்கின்றனர். சென்னை வந்த உடனே பேச்சை மாற்றி தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று சொல்கிறார்கள். மத்திய அரசு தடுப்பூசியை அதிகமாக தருவதை மறைத்து எதற்காக அரசியல் செயல்கிறார்கள் என்பது தெரியவில்லை.
மத்திய அரசு¸பெட்ரோல்¸ டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலையை செய்து வருகிறார்கள். இது ஓரு புறம் இருக்க இன்னொரு புறம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என்று சொன்னார்கள். அதை அவர்கள் செய்யவில்லை. புதிய பார்முலா அடிப்படையில் ஒரு லிட்டருக்கு 13 ரூபாய் நேரடியாகவும்¸ கச்சா எண்ணெய் விலையில் 15 சதவீதமும் மாநில அரசுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலமாக திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1ரூபாய் 20காசு சம்பாதித்துள்ளனர். எனவே 5ரூபாய்க்கு பதில் 6 ரூபாய் 20 பைசா குறைக்க வேண்டும். சாமானிய மனிதனின் வலியை பா.ஜ.க உணருகிறது. நாங்களும் டூவீலருக்கு அதே பெட்ரோலைத்தான் போடுகிறோம். அதே கேசைத்தான் வாங்குகிறோம். உங்களுக்கு இருக்கக் கூடிய வலி எங்களுக்கும் இருக்கிறது. எனவே நிச்சயமாக பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை புதிய அரசு பொறுப்பேற்றால் பழைய அரசு மேல் லஞ்ச ஒழிப்பு துறையை ஏவுவது வாடிக்கையான ஒன்று தான். லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் அவர்களது கடமையை செய்ய வேண்டும். அரசு சொல்கிற எல்லா விஷயத்தையும் செய்ய வேண்டும் என்பதில்லை. எல்லோரும் மனசாட்சிப்படி வேலை செய்ய வேண்டும். திமுக அரசு தவறுகள் நிறைய செய்துள்ளது. பாதிரியார் ஒருவர்¸ பாரத மாதாவையும்¸ பிரதமரையும்¸ அரசியல் தலைவர்களையும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். நாங்கள் போராட்டம் நடத்திய பிறகும் அவரை விசாரணைக்கு அழைக்காமல் உள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சிப்பவர்களை¸ ஜனநாயக அடிப்படையில் கருத்தை சொல்பவர்களை குண்டாசில் உள்ளே தூக்கி போடுகின்றனர்.
தமிழகத்தில் கருத்து சுதந்திரம் குறைந்து கொண்டே வருகிறது. தி.மு.க. கடவுள் இல்லை என்று சொல்கிறது. தி.மு.கவினர் யாரை வேண்டுமானாலும் அழைத்து வந்து கூட்டம் போட்டாலும் திருவண்ணாமலை கோவிலுக்கு ஒரு நாள் வரும் கூட்டத்தை விட அவர்கள் கூட்டம் தாண்டாது. எனவே மக்களிடம் திரும்பவும் விழிப்புணர்ச்சியை கொண்டு வருவோம்.
இவ்வாறு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.