திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாடியிலிருந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களுர் ருத்ரன் சர்ச் பகுதி ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் பிரத்தம்(வயது 23). இவரும் பெங்களுரைச் சேர்ந்த ஜெனீபர் என்பவரும் 4 வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இன்று காலை இவர்கள் பைக்கில் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
மணலூர் பேட்டை ரோட்டில் உள்ள கன்னமடை காட்டில் உள்ள கோயிலுக்கு சென்ற போது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறிக் கொண்டே ஜெனீபர் ஓடி வந்தாராம். அப்போது அந்த பக்கமாக ரோந்து வந்த வனத்துறையினர் அவரிடம் விசாரித்தனர். தங்களை காரிலும், பைக்கிலும் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் தங்கள் மீது ஸ்பிரே அடித்ததாகவும், அது முதல் ஒரு வித மயக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தாராம்.
அந்த சமயத்தில் கையில் கொடுவாளுடன் போதையில் வந்த பிரத்தம், அங்கு ரகளையில் ஈடுபட்டார். அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை கத்தி முனையில் மிரட்டி கீழே இறங்கச் செய்து அந்த மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலைக்கு வந்தார். அண்ணாமலையார் கோயிலுக்கு திருமஞ்சன கோபுரம் வழியாக சென்றார். அப்போது அங்கிருந்த பெண் போலீசையும் கொடுவாளை காட்டி மிரட்டி விட்டு உள்ளே நுழைந்தார். இது பற்றி அந்த பெண் போலீஸ் மற்ற போலீசாருக்கு மைக்கில் தகவல் தெரிவித்தார்.
கோயிலுக்குள் நுழைந்த பிரத்தம் கோயில் அலுவலகத்திற்கு சென்று இணை ஆணையர் அறையில் அவரது இருக்கையில் அமர்ந்து கொண்டார். அந்த கதவை பணியாளர்கள் திறக்க முயற்சித்தனர். அப்போது அந்த வாலிபர் கொடுவாளால் கண்ணாடியை உடைத்தார். இதனால் பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
பிறகு அலுவலகத்தின் மற்ற பகுதிகளையும் அடித்து நொறுக்கி விட்டு பிரத்தம், சக்தி விலாச சபா மண்டபத்திற்கு சென்று போடப்பட்டிருந்த சீலிங்கின் மீது ஏறி நடந்தார். அப்போது சீலிங் உடைந்து கீழே விழுந்ததில் அவரது காலில் அடிப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவரை பிடித்த கோயில் பணியாளர்கள் தர்ம அடி கொடுத்து கைகளை பின்னால் கட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரத்தத்திற்கு அடிபட்டுள்ளதால் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மணலூர் பேட்டை ரோட்டில் நின்றிருந்த ஜெனீபரை வனத்துறையினர் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தினால் மணலூர் பேட்டை ரோட்டிலும், அண்ணாமலையார் கோயிலிலும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரத்தம் எதற்காக காதலியுடன் திருவண்ணாமலைக்கு வந்தார்?, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் யார்?, அண்ணாமலையார் கோயிலுக்குள் நுழைந்து அவர் ரகளையில் ஈடுபட்டது ஏன்? என்பது சரியாக தெரியாமல் உள்ளது. அவருக்கு போதை தெளிந்ததும் இதுபற்றி போலீசார் விசாரிப்பார்கள் என தெரிகிறது.