திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஜூன் மாதம் டி.டி.வி.தினகரனின் மகள் திருமணம் சசிகலா தலைமையில் நடைபெற உள்ளது.
சாமி தரிசனம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவரது மனைவியுடன் திருவண்ணாமலைக்கு இன்று வருகை தந்தார். அண்ணாமலையார் கோயிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் சன்னதிகளில் வழிபட்டனர்.
நிச்சயதார்த்தம்
பிறகு அண்ணாமலையார் கோயிலில் தனது மகளின் திருமணம் நடைபெற உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தை பார்வையிட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரனும்¸ காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும்¸ டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் திருமண நிச்சயதார்த்தம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவாமிமலை அருகில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது.
அப்போது சசிகலா பெங்களுர் சிறையில் இருந்தார். அவரது ஒப்புதலின்படியே நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து அவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் திருமணம் வைத்துக் கொள்வது என முடிவு செயய்ப்பட்டது. பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உத்தேசிக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிந்து திருமணம் நடத்திக் கொள்வது என இருவீட்டார் தரப்பிலும் முடிவு எடுக்கப்பட்டது.
12ந் தேதி திருமணம்
இதையடுத்து இவர்களது திருமணம் அடுத்த மாதம் 12ந் தேதி நடத்துவது என தற்போது முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திருமணம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் நடக்கிறது. திருமணத்திற்கு சசிகலா தலைமை தாங்குகிறார். இதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு மறுநாள் 13ந் தேதி திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.
அண்ணாமலையார் கோயிலை தேர்தெடுத்தது ஏன்?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குழந்தை வரம் தரக்கோரி டி.டி.வி.தினகரனும்¸ அவரது மனைவியும் வேண்டிக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஜெயஹரிணி என ஜெயலலிதா பெயர் சூட்டினார். அதன்பிறகு ஜெயஹரிணியின் காது குத்தல் நிகழ்ச்சியும் அண்ணாமலையார் கோயிலில் ஜெயலலிதா தலைமையில்¸ சசிகலா முன்னிலையில் கடந்த 2000ம் ஆண்டு நடந்தது.
குழந்தை வரத்தை தந்த அண்ணாமலையார் கோயிலிலேயே மகள் திருமணத்தை நடத்திட டி.டி.வி.தினகரன் முடிவு எடுத்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கான பெரும்பாலான வேலைகள் அவரது கல்லூரி நண்பரும்¸ திருவண்ணாமலை அர்ப்பனா ஓட்டல் உரிமையாளருமான முத்துக்கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் திருமணத்திற்கு முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.
அண்ணாமலையார் கோயிலுக்கு டி.டி.வி.தினகரனுடன் அவரது உதவியாளர் ஜனார்த்தனம், திருவண்ணாமலை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர். ஏ.ஜி.பஞ்சாட்சரம் ஆகியோர் சென்றிருந்தனர்.