பெங்களுருவைச் சேர்ந்த இளம்பெண் இருக்கிறாரா? என திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் சல்லடை போட்டு தேடினர்.
திருவண்ணாமலையில் பிறந்த பரமஹம்ச நித்தியானந்தர்¸ தனது தியான பீடத்தை கனடா உள்பட 50 நாடுகளில் நிறுவியுள்ளார். இதன் தலைமை இடம் பெங்களுருவில் உள்ள பிடதியில் உள்ளது. தன் மீது உள்ள வழக்கு மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறிய அவர் தென் அமெரிக்கா பகுதியில் தனி தீவை விலைக்கு வாங்கி கைலாசா எனும் நாட்டை நிறுவி உள்ளதாக கூறப்படுகிறது. இணைய வழியாக சத்சங்க நிகழ்ச்சி நடத்தி தினமும் அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
சில நாட்களாக அவர் ஆன்லைனில் தோன்றததால் அவர் எங்கே சென்றார் என்ற விவாதம் எழுந்தது. அதற்கு நித்யானந்தா¸ தனக்கு ஏகப்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. உலக நன்மைக்காக தான் சமாதி நிலையில் இருப்பதாகவும்¸ விரைவில் சத்சங்கம் நடத்துவேன் எனவும் தன் உடல்நிலை குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தனது அதிகார பூர்வ இணைய தள பக்கத்தில் நித்யானந்தா பதிவிட்டிருந்தார்.
கைலாசா எனும் நாட்டை நித்யானந்தா தோற்று வித்திருப்பதால்¸ பல நாடுகளில் இருக்கும் அவரது தியான பீடங்கள்¸ கைலாஸா என மாற்றப்பட்டன. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடமும் கைலாஸா-திருவண்ணாமலை என்ற பெயர் பலகையோடு காட்சியளித்து வருகிறது. இங்கு பவுர்ணமி நாட்களிலும்¸ தீபத்திருவிழா நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
நித்யானந்தா ஆசிரமங்களில் பல பக்தர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இல்லற வாழ்ககையை துறந்து பலர் துறவிகளாக உள்ளனர். இதில் இளம்பெண்களும் அடங்குவர். இவர்களில் பெங்களுருவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநாகேஷ் என்பவரின் இளைய மகள் வர்தினி(வயது 22)யும் ஒருவர். ஸ்ரீநாகேஷின் மனைவி மாலா பேராசிரியராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மூத்த மகள் பெயர் வைஷ்ணவி. பிடதி ஆசிரமத்தில் இருந்து வந்த வர்தினி¸ திடீரென காணாமல் போகவே அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநாகேஷ் மற்றும் அவரது குடும்பத்தார்¸ திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் இருப்பதாக சந்தேகப்பட்டு இங்கு வந்தனர்.
அவர்களை உள்ளே அனுமதிக்க ஆசிரம நிர்வாகம் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தனது மகளை கண்டுபிடித்து தரும்படி திருவண்ணாமலை தாலுகா போலீசில் ஸ்ரீநாகேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையில் போலீசார் நேற்று இரவு 9 மணிக்கு ஆசிரமத்திற்குள் சென்றனர்.
ஆசிரமத்துக்குள் இருந்த ஒவ்வொரு அறையிலும் வர்தினியை தேடினர். அப்போது ஸ்ரீநாகேஷ்¸ அவரது மனைவி மாலா¸ மூத்த மகள் வைஷ்ணவி ஆகியோர் உடனிருந்தனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடிப்பார்த்ததில் வர்தினி அங்கு இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்ரீநாகேஷ மற்றும் அவரது குடும்பத்தினர் சோகமாக வெளியேறினர். செய்தியாளர்களின் கேள்விக்கு ஸ்ரீநாகேஷ் பதில் ஏதும் அளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டார்.
நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.