மேடையிலிருந்து கீழே விழும் சப்-இன்ஸ்பெக்டர் |
திருவண்ணாமலை அருகே நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர்¸ கலெக்டர் முன்னிலையில் அதிமுகவினர் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம்¸ செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணக்கருக்கை¸ கரியமங்கலம் கிராமங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மூலமாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து¸ கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில்¸ மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி¸ திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி¸ சுகாதார துணை இயக்குநர் ஆர்.மீரா¸ வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி¸ முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன்¸ முன்னாள் மாநில கூட்டுறவு ஒன்றிய தலைவர் அமுதா அருணாசலம்¸ முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு¸ கண்ணக்குருக்கை ஊராட்சி மன்ற தலைவர் மண்ணம்மாள் ரேணுகோபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கண்ணக்குருக்கையில் நடைபெற்ற விழாவில் அந்த ஊராட்சி செயலாளராக சங்கர் கணேஷ் என்பரை நியமிக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரும்¸ கிராம மக்களும் வேண்டுகோள் விடுத்தும் அதை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தடுத்து வருவதாக கூறி அவருக்கு எதிராக கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக விழா மேடையில் அதிமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தள்ளி விட்டுக் கொண்டதில் மேடையில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும்¸ அதிமுகவினர் சிலரும் கீழே விழுந்தனர். மேலும் அமைச்சரும் நாற்காலியிலிருந்து கீழே விழப் போனார். அவரை அருகில் இருந்தவர்கள் தாங்கி பிடித்துக் கொண்டனர். இதன் காரணமாக விழா மேடையில் சிறிது நேரம் அமளி துமளியாக இருந்தது.
பின்னர். மாவட்ட கழக செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி தலையீட்டு சமாதானம் செய்தார். கழக கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
பிறகு பேசிய சேவூர் இராமச்சந்திரன்¸ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை¸ எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து¸ சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு மருத்துவர்¸ ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை கடந்த 14ந்தேதி அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் துவங்கி வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 39 இடங்களிலும்¸ செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 34 இடங்களிலும்¸ ஆக திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 73 இடங்களில் மினி கிளினிக் திறக்கப்படுகிறது என்றார்.
அமைச்சர் பேசி முடித்ததும் அவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மண்ணம்மாள் ரேணுகோபால்¸ ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண்டும் என கேட்டு மனு அளித்தார். கிராம மக்கள் எதிர்ப்பின் காரணமாக விழாவை அவசரம்¸ அவசரமாக முடித்துக் கொண்டு அமைச்சர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு திருவண்ணாமலையிலிருந்து அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு விழா நடைபெற்றது.