திருவண்ணாமலையில் பிரபல நடிகர், நடிகை, 100 ஜப்பானியர்
மகாலட்சுமி யாகத்தில் கலந்து கொண்டனர்- அரசியல் பிரமுகர்களும் பங்கேற்பு
திருவண்ணாமலையில் நடைபெற்ற மகாலட்சுமி யாகத்தில் பிரபல நடிகர், நடிகைகள், 100 ஜப்பானியர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஜப்பானியர்களும், திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்ட ஸ்ரீ அஷ்டலஷ்மி நவநிதி ஸஹித ஸ்ரீ குபேர தனாகர்ஷ்ண மகாலட்சுமி மகா யாகம் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பிரபல நாடி ஜோதிடர் ஸ்ரீஅகத்தியர் துரைசாமி சுப்புரத்தினத்தால் நடத்தப்பட்டது.
15 வருடங்களாக பல்வேறு யாகங்களை நாடி ஜோதிடர் ஸ்ரீஅகத்தியர் துரைசாமி சுப்புரத்தினம், ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை செங்கம் சாலையில் அதினா ஓட்டல் எதிரில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைத்தும், 125 தீட்சிதர்களை கொண்டும் இந்த ஸ்ரீ அஷ்டலஷ்மி நவநிதி ஸஹித ஸ்ரீ குபேர தனாகர்ஷ்ண மகாலட்சுமி மகா யாகம் நடத்தப்பட்டது.
முதல்நாள் கலச ஸ்தாபனம், சங்கல்பம், கலைமாமணி ஸ்ரீராஜேஷ்வைத்யா வீணை நிகழ்ச்சி, வாணவேடிக்கையுடன் யாகம் தொடங்கியது. 2வது நாளான இன்று(6ந் தேதி) மகா பூர்ணாஹீதி நடந்தது. பிரமாண்டமான வடிவமைக்கப்பட்டிருந்த மகாலட்சுமி சிலைக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
செல்வவளம், உடல் ஆரோக்கியம் பெருகும், கல்வியில் சிறப்பு ஏற்படும், உத்யோக உயர்வு, தனவரவு கிடைக்கும், தொழில் அபிவிருத்தி அடையும், மதிப்பும், புகழும் கூடும், எதிரிகள் வீழ்வர், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், மனநிம்மதி ஏற்படும் என்பதால் ஆயிரக்கணக்கான பேர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர்கள் மோகன், ஜீவா, ஸ்ரீகாந்த், கணேஷ், அவரது மனைவி ஆர்த்தி, நடிகைகள், நளினி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீரம்யா என திரையுலகினர் பலர் பங்கேற்றனர்.
1980ல் கமல், ரஜினியோடு போட்டி போட்டு நடித்த மைக் மோகன் என்றழைக்கப்பட்ட நடிகர் மோகன், அவரது மனைவி ஆகியோர் 2 நாளும் நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்றனர். அவர்கள் தங்களது ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டனர். இதே போல் நடிகை நளினி போன்ற பிரபலங்களும் அர்ச்சனை செய்து கொண்டனர்.
மேலும் ஜப்பான் நாட்டினர் 100 பேர் தங்களது குருநாதர் மசாஹிடே அவயோமா தலைமையில் யாகத்தில் கலந்து கொண்டு மகாலட்சுமியை வழிபட்டனர். இதே போல் அரசியல் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். யாகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நாடி ஜோதிடர் ஸ்ரீ அகத்தியர் துரைசாமி சுப்புரத்தினம், பொற்கொடி சுப்புரத்தினம், ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிர்வாகி தியாக. குறிஞ்சி செல்வன், டாக்டர் விஜயலட்சுமி குறிஞ்சி செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.