வயதாகவில்லை,இன்னும் 25 வருடம் உழைப்பேன்-அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார். அதிமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு பாராட்டு
தனக்கு வயதாகவில்லை என்றும், இன்னும் 25 வருடம் உழைப்பேன் எனவும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டியில் ரூ.36.18 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் அங்கான்வாடி மைய கட்டிடத்தையும் அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். மேலும் ரூ. 1 கோடியே 12 லட்சத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கும், ரூ. 10 லட்சத்தில் பல்பொருள் அங்காடி கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டி பேசினார்.
அவர் பேசியதாவது,
ஏறக்குறைய 26 ஆண்டு காலம் எனக்கு அண்ணன் இல்லாத குறைய நிவர்த்தி செய்து கொண்டிருப்பவர் தா.வேணுகோபால். பொது வாழ்க்கையில் 80 ஆண்டு காலம் செலவிட்டவர். அவர் 100 ஆண்டு காலம் வாழ வேண்டும் என உங்கள் அத்தனை பேர் சார்பில் வாழ்த்துகிறேன்.
அதிமுக தலைவர் நினைவு பரிசு
காட்டாம்பூண்டியில் பண்பாடு குறையாமல் மாற்றுக் கட்சியில் இருந்தாலும் கூட மதிக்க வேண்டியவர்களை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அன்பு சகோதரி அமுதா (அதிமுக) எனக்கு பட்டாடை அணிவித்து நினைவு பரிசு கொடுத்ததை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் இந்த ஊரில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதனால் இந்த ஊராட்சியை புறக்கணிக்க வேண்டும் என அரசு கருதாமல், இதுவும் நம்முடைய ஊராட்சி தான், ஊராட்சி மன்ற தலைவர் நம்முடையவர் தான் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இருந்த காரணத்தினால் தான் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.
காட்டாம்பூண்டி ஊராட்சி வளர்ந்திருப்பதன் காரணம் வேணுகோபால்தான். அவர் ஒரு முறை, இரு முறை அல்ல எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர். இதனால் இந்த ஊராட்சி சிறப்பாக அமைவதற்கு பல திட்டங்கள், கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் வருவதற்கு பெரும் உதவியாக இருந்திருக்கிறார்.
காட்டாம்பூண்டியை மிஞ்ச முடியவில்லை
நானே பல காலங்களில் என்னுடைய ஊராட்சியில் எதையுமே செய்ததில்லை. கிட்டத்தட்ட ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். நான்கு முறை இந்த தொகுதியில் தான் வெற்றி பெற்று இருக்கிறேன். தொகுதிக்கு, மாவட்டத்துக்கு செய்கிறோமே நமது ஊரை விட்டு விட்டோமே என காட்டாம்பூண்டியை பார்த்து எனக்கு தோன்றியது. எனது ஊர் என்று நான் தனியாக எதையும் பிரித்து பார்த்ததில்லை. வேணுகோபாலை பார்த்து தான் எனது ஊருக்கு செய்ய ஆரம்பித்தேன்.
காட்டாம்பூண்டிக்கு போட்டியாக கல்யாண மண்டபம், படிப்பகம் கட்டினேன். ஆனாலும் காட்டாம்பூண்டியை மிஞ்ச முடியவில்லை. ஏனென்றால் இந்த ஊரில் உள்ள மேல்நிலைப்பள்ளியை போன்று எனது ஊரில் என்னால் ஆரம்பிக்க முடியவில்லை. இதனால் வேணுகோபாலை விட ஒரு மார்க் கம்மியாக உள்ளேன்.
பெண்களுடைய படிப்பு சதவீதம் குறைகிறது. ஆற்றல் குறையவில்லை. ஆண்களை விட பெண்களுக்கு தான் ஆற்றல் அதிகம். அதனால் தான் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் ஆண்களை விட பெண்கள் ஒன்றாவது இடத்தையும், இரண்டாவது இடத்தையும் பிடிக்கின்றனர் மூன்றாவது இடத்தை ஆண்கள் தட்டு தடுமாறி பிடிக்கின்றனர். அப்படி ஒரு நிலைமை உள்ளது. பெண்களிடையே பட்டதாரி சதவீதம் குறைகிறது. அதனால்தான் பெண்களை பட்டதாரி ஆக்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை முதல்வர் வழங்கி வருகிறார்.
நான் இந்த கூட்டத்தில் உட்கார்ந்து பேசினால் பத்திரிகையில் பாக்ஸ் கட்டி விடுவார்கள். வயதாகி விட்டது அதனால் தான் உட்கார்ந்து பேசுகிறார் என்று. எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை. 25 வருடத்திற்கு உழைக்க தயாராக இருப்பவன் நான்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் எ.வ.வேலு, மொத்தம் 377 பயனாளிகளுக்கு ரூ.67.95 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் கலெக்டர் பா.முருகேஷ், சி.என். அண்ணாதுரை எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் ரமணன், மாவட்ட கவுன்சிலர்கள் இல. சரவணன், ஞானசௌந்திரி மாரிமுத்து, காட்டாம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.