திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா 6வது நாளான இன்று இரவு வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக இந்த வருடம் தீபத்திருவிழா பக்தர்களின்றி நடத்தப்படுகிறது. தினமும் சாமி ஊர்வலங்கள் கோயில் உட்பிரகாரத்தில் நடந்து வருகிறது.
இன்று 25ந் தேதி 6ம் நாள் திருவிழா நடைபெற்றது. காலை நடைபெற வேண்டிய 63 நாயன்மார்கள் ஊர்வலத்திற்கு பதில் திருநாவுக்கரசர்¸ மாணிக்கவாசகர்¸ சுந்தரமூர்த்தி¸ திருஞானசம்மந்தர் உற்சவம் நடைபெற்றது.
63 நாயன்மார்களில் முதன்மையான நால்வர் திருஞானசம்பந்தர்¸ திருநாவுக்கரசர்¸ சுந்தரர்¸ மாணிக்கவாசகர் ஆகியோர் என்பதால் இவர்களது உற்சவம் மட்டுமே நடைபெற்றதாக கோயில் தரப்பில் தெரிவித்தனர். வழக்கமாக 6ம் நாள் இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் கண்கவர் வெள்ளித் தேர் மாடவீதிகளில் செல்வது வழக்கம். இந்த வருடம் அதற்கு பதில் வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் விநாயகர்¸வள்ளி தெய்வானை சமேத முருகர்¸ பெரியநாயகர்¸ பராசக்தி அம்மன்¸ சண்டிகேசுவரர் ஆகியோர் திருக்கல்யாண மண்டபத்தில் தீபாரதனைக்கு பின் ஐந்தாம் பிரகாரம் எழுந்தருளினர். கொட்டும் மழையில் இந்த உற்சவம் நடைபெற்றது.
நாளை வியாழன் 26ந் தேதி 5 லட்சம் பேர் திரளக்கூடிய மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் கோயிலுக்குள் பஞ்சமூர்த்திகள் உற்சவமும்¸ 27.11.2020 வெள்ளி 8-ம் நாள் திருவிழாவில் மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறுகிறது.
29.11.2020 ஞாயிறு 10-ம் நாள் திருவிழாவில் விடியற்காலை 4 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருளுகிறார். வருடத்துக்கு ஒரு முறை காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்க 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
அன்று கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும்¸ 28ந் தேதி முதல் 30ந் தேதி வரை வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்குள் வர அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 27ந் தேதிக்கு பிறகு வெளியூர் நபர்கள் அனைவவரும் மடம்¸ திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதிகளை விட்டு வெளியேறிவிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.